1 குவின்டால் மாம்பழம் ரூ.1,616 நிர்ணயித்த அரசு

பெங்களூரு: ''மாம்பழ விவசாயிகளுக்கு உதவும் வகையில், குவின்டாலுக்கு 1,616 ரூபாய் ஆதார விலையை அரசு நிர்ணயித்துள்ளது. அடுத்த மாதத்தில் இருந்து விலை அமலுக்கு வரும்,'' என, மாநில வேளாண் துறை அமைச்சர் செலுவராயசாமி தெரிவித்தார்.

பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:

தொடர் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட மாம்பழ விவசாயிகளுக்கு உதவ அரசு முன்வந்துள்ளது. 1 குவின்டால் மாம்பழம், 1,616 ரூபாய் ஆதார விலையை அரசு நிர்ணயித்துள்ளது. அடுத்த மாதத்தில் இருந்து இந்த விலை அமலுக்கு வரும்.

இம்மாதம் 11, 13ம் தேதிகளில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுடன் காணொளி வாயிலாக, கர்நாடக மாம்பழ விவசாயிகள் நிலை குறித்து விளக்கப்பட்டது. எம்.ஐ.எஸ்., எனும் சந்தை தலையீட்டு திட்டத்தின் கீழ், உதவ கோரிக்கை விடுத்திருந்தோம். இதற்கு சாதகமாக பதிலை மத்திய அமைச்சர் அளித்துள்ளார். இதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement