பெங்களூரு நீர் பாதுகாப்பு திட்டங்களுக்காக ரூ.3,662 கோடி வழங்க உலக வங்கி ஒப்புதல்

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நீர் பாதுகாப்பு திட்டங்களை மேற்கொள்வதற்காக ரூ.3,662 கோடி ஒதுக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.


தொழில் நகரமாக அறியப்படும் பெங்களூருவில் தண்ணீர் பிரச்னை தீர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இதனை தடுக்க கர்நாடகா அரசும் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டும் வருகிறது.


இது குறித்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கர்நாடகா நீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 183 ஏரிகளை தூர்வாருவதன் மூலம், பெங்களூருவில் வெள்ள பாதிப்பை தடுக்க முடியும். கர்நாடகா பேரிடர் மேலாண்மை மையத்தை நவீனப்படுத்துவதன் மூலம், வானிலை நிலவரத்தை துல்லியமாக கணிப்பதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.


இந்த நிதியைப் பயன்படுத்தி ஒரு லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்படும். மேலும், 9 கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் கட்டப்பட்டு, ஏரிகள் மற்றும் வடிகால்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க முடியும். அதுமட்டுமில்லாமல், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை தொழிற்சாலைகளின் பயன்பாடு மற்றும் பெங்களூர் பகுதியில் நிலத்தடி நீரை உயர்த்த பயன்படுத்தப்படும்.


ரூ.3,662 கோடி கடனை திருப்பி செலுத்த 20 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 5 ஆண்டுகள் கூடுதல் அவகாச காலமாகும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement