பழவேற்காடு இறங்குதளத்தில் மீன் கழிவுகளால் துர்நாற்றம்

பழவேற்காடு, பழவேற்காடு மீன் இறங்குதள வளாகத்தில் கொட்டப்படும் கழிவுகளால், துர்நாற்றம் வீசி வருவது சுற்றுலா பயணியரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பழவேற்காடு ஏரியின் அருகே மீன் இறங்குதளம் மற்றும் மீன் விற்பனை கூடம் அமைந்துள்ளது. கடல் மற்றும் ஏரியில் மீன்பிடித்து வரும் மீனவர்கள், இறங்குதளத்தில் படகுகளை நிறுத்தி, பிடித்து வரப்பட்ட மீன்களை விற்பனை கூடத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.

இந்த மீன் இறங்குதள வளாகம் முழுதும் மீன் கழிவுகள் குவிந்துள்ளன. விற்பனையாகாத மீன், சுத்தம் செய்யப்பட்ட மீன், இறால் ஆகியவற்றின் கழிவுகள் இங்கு கொட்டி குவிக்கப்படுகின்றன.

இதனால், இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இது, பழவேற்காடுக்கு சுற்றுலா வரும் பயணியரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சுற்றுலா பயணியர் கூறியதாவது:

மீன், இறால் கழிவுகள் மறுசுழற்சிக்கு உகந்தவை. இவற்றை கோழி தீவனத்திற்கு பயன்படுத்தும் ஆலைகளுக்கு அனுப்பலாம். கழிவுகள் முறையாக கையாளாமல் கொட்டி குவிக்கப்படுவதால், சுகாதார பாதிப்புகளும், துார்நாற்றமும் ஏற்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement