'இளைஞர்களை வேகமாக சேருங்கள்' கட்சியினரை முடுக்கிவிடும் பழனிசாமி

மதுரை: 'அடுத்தடுத்த தேர்தல்களில் 45 வயதிற்குட்பட்டவர்கள், இளைஞர்கள் இருந்தால்தான் சிறப்பாக தேர்தல் பணியாற்றி ஆட்சி அமைக்க முடியும்' என மாவட்ட செயலர்களுக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், இரட்டை தலைமையாக செயல்பட்ட அ.தி.மு.க., 2019 லோக்சபா தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு, 19.4 சதவீதம் ஓட்டுகளை பெற்றது.
ஓட்டுகள் இழப்பு
கடந்த 2024 லோக்சபா தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்டு, 20.4 சதவீத ஓட்டுகளை பெற்றது. 2019ல் சராசரியாக ஒரு தொகுதிக்கு, 4.16 லட்சம் ஓட்டுகள் பெற்ற அ.தி.மு.க., 2024ல் 2.61 லட்சம் ஓட்டுகளைத்தான் பெற்றது.
ஒவ்வொரு தொகுதியிலும் 1.5 லட்சம் ஓட்டுகளை இழந்ததற்குபன்னீர்செல்வம், தினகரன் பிரிந்ததும், வலுவான கூட்டணி இல்லாததும் காரணங்களாக சொல்லப்பட்டாலும், கட்சியில் புதிதாக இளைஞர்களை சேர்த்து கட்சியை வலுப்படுத்தாததே முக்கிய காரணம் என்பதை பழனிசாமி உணர்ந்திருக்கிறார்.
அதனால், புதிதாக இளைஞர்களை சேர்த்து கட்சியை வலுப்படுத்த, முக்கிய நிர்வாகிகளுக்கு பழனிசாமி உத்தரவிட்டிருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து, கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
ஓட்டு சதவீதத்தை அதிகரித்தால் மட்டுமே, தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலையில், அதற்கு அடிப்படையான 'பூத்' கமிட்டிகளை வலுப்படுத்த பழனிசாமி திட்டமிட்டு, பொறுப்பாளர்களை நியமித்து, அவ்வப்போது புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, ஓட்டுகளை அதிகரிக்க செய்வதற்கான அறிவுரைகளை வழங்கி வருகிறார்.
நேற்று முன்தினம் நடந்த கூட்டத்திலும், இதுகுறித்து பேசிய பழனிசாமி, 'பூத் கமிட்டிகளை வலுப்படுத்தினால் மட்டுமே, நம் ஓட்டு வங்கியை பாதுகாக்க முடியும். கூடவே, கட்சியில் புதிய இளைஞர்களை சேர்த்தாக வேண்டும்.
'பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளை கொண்ட கூட்டணி, தற்போது அமைந்துள்ளது. மேலும் சில கட்சிகள், கூட்டணியில் வரவுள்ளன. இதனால், அ.தி.மு.க., தலைமையில் வலிமையான கூட்டணி அமையும்.
முனைப்பு
'பூத்களில் பணியாற்ற, இளைஞர்கள்தான் சரியாக இருப்பர். எனவே, 45 வயதிற்குட்பட்டவர்கள், இளைஞர்களை கட்சியில் சேர்த்து, களப்பணியாற்ற வாய்ப்பளிக்க வேண்டும்.
'அவர்களை வைத்துதான் அடுத்தடுத்து தேர்தல்களை சந்தித்து, வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க முடியும்' என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, கட்சியில் இளைஞர்களை சேர்க்க, மா.செ.,க்கள் துவங்கி கிளைச்செயலர்கள் வரை முனைப்புடன் களம் இறங்கி உள்ளனர். இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.
மேலும்
-
சிந்தனையாளர் முத்துக்கள்!
-
மெக்சிகோவில் சாலை கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு; 12 பேர் உயிரிழப்பு; 20 பேர் காயம்
-
ஆபரேஷன் சிந்தூர் குறித்த தகவல் கசிவு; பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கடற்படை ஊழியர் கைது
-
மழை எதிரொலி: நிரம்பியது பில்லூர் அணை; பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு
-
வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது
-
பெங்களூரு நீர் பாதுகாப்பு திட்டங்களுக்காக ரூ.3,662 கோடி வழங்க உலக வங்கி ஒப்புதல்