சுங்கத்துறை ரோந்துப்படகு ராமேஸ்வரத்தில் வீணானது

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் சுங்கத்துறை ரோந்துப் படகு பயன்படுத்தாமல் சேதமடைந்து முடங்கியதால் மத்திய அரசுக்கு 20 லட்சம் ரூபாய் வீணானது.

இலங்கை -ராமேஸ்வரம் இடையே தங்க கட்டிகள் கடத்தி வருவதையும், ராமேஸ்வரம் பகுதியில் இருந்து விலை உயர்ந்த பொருட்கள் கடத்திச் செல்வதை தடுக்கவும் 5 ஆண்டுகளுக்கு முன் ராமேஸ்வரம் சுங்கத்துறைக்கு, 20 லட்சம் ரூபாய் மதிப்பில் ரோந்து படகு வழங்கப்பட்டது.

இதில் உள்ள இரு அதிவேக இன்ஜின் மூலம் மணிக்கு 60 முதல் 80 கி.மீ., வேகத்தில் கடலில் சென்று கடத்தல்காரர்களை எளிதில் பிடிக்கலாம். சுங்கத்துறை சிப்பாய்கள் அமரும் இருக்கை வசதியும் உள்ளது.

ஆனால், இந்த ரோந்து படகில், 10 சதவீதம் கூட சுங்கத்துறையினர் பணியில் ஈடுபடாமல் ராமேஸ்வரத்தில் உள்ள இந்திய கடற்படையின் பாலத்தில் பல மாதங்களாக நிறுத்தி வைத்து அழகு பார்த்தனர்.

இதனால் சூறாவளியால் கடல் கொந்தளிப்பு, வெயில், மழையில் இன்ஜின் பழுதாகி, படகு பயனின்றி சேதமடைந்து முடங்கியது. ரோந்து படகை கடற்கரை மேலே சுங்கத்துறையினர் ஏற்றி வைத்து பழுதான இன்ஜினையும் மூடி வைத்தனர். இதன் காரணமாக மத்திய அரசுக்கு 20 லட்சம் ரூபாய் வீணாகிப் போனது.

Advertisement