யானைகள் வேட்டையை ஒழிக்க வேண்டும் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு

சென்னை : ''தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுவதை ஒழிக்க வேண்டும்,'' என, வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

தமிழகத்தை சேர்ந்த வனச்சரக அலுவலர்கள், யானைப் பாகன்கள், உதவியாளர் என, 15 பேர், தாய்லாந்து, லாம்பாங் பகுதியில், ஜூன் 17 முதல் 21ம் தேதி வரை, யானை பராமரிப்பு குறித்து பயிற்சி பெற்றனர். அவர்கள் பெற்ற பயிற்சி அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, வண்டலுார் உயிரியல் பூங்காவில் நேற்று நடந்தது.


இதில், அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்று, பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசியதாவது:


பயிற்சி முடித்துள்ள யானை பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வாழ்த்துகள். தாய்லாந்தில் யானைகள் எப்படி வளர்க்கப்படுகின்றன, நோய் சிகிச்சை முறைகள் குறித்து கூறினர். நம்மிடம், 54 யானைகள் உள்ளன. முதுமலை, ஆனைமலையில் யானை காப்பகங்கள் உள்ளன. இங்குள்ள யானைகளை, சிறப்பான முறையில் பராமரிக்க, இந்த பயிற்சி உதவியாக இருக்கும்.



தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுவதை ஒழிக்க வேண்டும். யானைகள் நாட்டின் செல்வம். தற்போது, யானை, புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுற்றுப்புறச் சூழலை துாய்மையாக வைத்திருக்க, அரசு மட்டுமின்றி, மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு, அமைச்சர் பேசினார்.

Advertisement