அமலோற்பவம் பள்ளியில் விழிப்புணர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

புதுச்சேரி : புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் வளர் இளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி மேரி கரோலின் உள்ளரங்கில் நடந்தது.

21ம் நுாற்றாண்டில் 'வளர் இளம் பருவத்தினர் எதிர்கொள்ளும் சவாலான உணர்ச்சிகளைக் கவனமுடன் கையாளுதல்' எனும் தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில், 9ம் வகுப்பு மாணவிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், பிராய்ட் கச் நல மையத்தின் நிறுவனர் கலைவாணி விநாயகம் தலைமையில், உளவியல் ஆலோசகர் ஹேமலதா பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

அதில், வளர் இளம் பருவத்தினரின் உளவியல், உணர்ச்சி மற்றும் சமூக ரீதியான மாற்றங்கள் பற்றி எடுத்துரைத்தனர். மாணவப் பருவத்தில் தாங்கள் எதிர்கொள்ளும் சவாலான உணர்ச்சிகளைக் கையாள பழக்குதல், கல்வியோடு இணைந்து முன்னேற துணை செய்யும் வழிமுறைகள், சீரான மனநலம் பேணுதல் ஆகியன குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

வளர் இளம் பருவ உணர்ச்சிச் சிக்கல்களை இனம் கண்டறிந்து அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள் தங்களது அனுபவங்கள், சிக்கல்கள், முடிவெடுக்க முடியாத சூழ்நிலையில் பெற்றோர் மற்றும் சமுதாயத்தோடு ஒத்துப்போவதில் ஏற்படும் தயக்கங்கள் குறித்து வெளிப்படையாக பேசினர். மாணவிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு உளவியல் ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கினர்.

இந்நிகழ்வில் மாணவிகள் தயக்கமின்றி ஆர்வமுடன் பங்கேற்று, மன அழுத்தம் குறைந்து, தெளிந்த மனநிலை பெற்றனர்.

Advertisement