ஆண்டு முழுதும் காவிரி ஆரத்தி: சிவகுமார் தகவல்

பெங்களூரு : “கே.ஆர்.எஸ்., அணையில் ஆண்டு முழுதும் காவிரி ஆரத்தியை நடத்த திட்டமிட்டுள்ளோம்,” என, துணை முதல்வர் சிவகுமார் அறிவித்துள்ளார்.
மாண்டியா ஸ்ரீரங்கப்பட்டணா கண்ணம்பாடி கிராமத்தில் உள்ள, கே.ஆர்.எஸ்., அணை பகுதியில் காவிரி ஆரத்தி நடத்த முடிவு செய்த அரசு, இதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கியது. காவிரி ஆரத்தி நடத்தினால் அணைக்கு பாதிப்பு ஏற்படுமென, மாண்டியா விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதனால், மாண்டியா விவசாயிகளுடன், துணை முதல்வர் சிவகுமார் பெங்களூரில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
மாண்டியா மாவட்ட பொறுப்பு அமைச்சர் செலுவராயசாமி, கன்னட கலாசார அமைச்சர் சிவராஜ் தங்கடகி, ஸ்ரீரங்கப்பட்டணா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரமேஷ் பண்டிசித்தேகவுடா, பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜாதி, மதம்
பின், சிவகுமார் அளித்த பேட்டி:
காவிரி ஆறு, கர்நாடகாவின் சொத்து. பெங்களூரின் குடிநீர் தேவையை நிறைவேற்றவும், கர்நாடகா, தமிழக விவசாயிகளுக்கும் பெரும் உதவியாக உள்ளது.
இதனால் காவிரி தாய்க்கு மரியாதை செலுத்த நாங்கள் முன்வந்துள்ளோம்.
காவிரி ஆரத்தி நடத்த எங்களுக்கு பல ஆலோசனைகள் வந்துள்ளன. காவிரி அன்னைக்கு ஜாதி, மதம், நிறம் இல்லை. காவிரி அனைவரின் சொத்து. கே.ஆர்.எஸ்., அணைக்கு புதிய ரூபம் கொடுக்க நினைக்கிறோம்.
மைசூரு, கே.ஆர்.எஸ்., அணைக்கு நிறைய சுற்றுலா பயணியர் வருகின்றனர். இன்னும் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி செய்கிறோம். பெங்களூரு சாங்கி ஏரியில் ஆரத்தி நடத்திய போதும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காவிரி ஆரத்தியையும் சிலர் தனிப்பட்ட காரணங்களுக்காக எதிர்க்கின்றனர். நம் முயற்சி தோல்வி அடையலாம். பிரார்த்தனை ஒரு போதும் தோல்வி அடையாது. எங்கு பக்தி உள்ளதோ அங்கு கடவுள் உள்ளார்.
குடகு கலாசாரம்
கே.ஆர்.எஸ்., பகுதியில் காவிரி ஆரத்தி நடத்தினால், அணைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகள் ஆதங்கம் கொண்டனர். அதில் தவறு இல்லை. விவசாயிகளை அழைத்து அவர்களுக்கு எழுந்த சந்தேகத்தை தீர்த்து வைத்துள்ளோம்.
அணை இருக்கும் இடத்தில் காவிரி ஆரத்தி நடக்காது. சிறிது துாரத்தில் நடக்கும் என்று அவர்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளேன். காவிரி ஆரத்தியை பற்றி அவர்களுக்கு சரியான தகவல் இல்லை.
காவிரி ஆரத்திக்கு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்கின்றன. பல துறைகள் வேலை செய்கின்றன. பணிகள் என்ன மாதிரி நடக்கிறது என்ற தகவலை, இன்னும் இரண்டு நாட்களில் வெளியிடுகிறேன். காவிரி ஆரத்தியின்போது மைசூரு, மாண்டியா, குடகு, மங்களூரு கலாசாரத்தை பிரதிபலிப்போம்.
10,000 இருக்கை
காவிரி ஆரத்தியின் மூலம் மாண்டியா, மைசூரு மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அமைச்சர் செலுவராயசாமி தலைமையில் ஒரு குழு வடமாநிலங்களுக்கு சென்று கங்கா ஆரத்தி, ஹரித்துவாரில் நடக்கும் ஆரத்தி முறையை பார்த்து வந்து அறிக்கை சமர்ப்பித்தனர்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் காவிரி ஆரத்திக்கு ஏற்பாடு செய்கிறோம்.
தசராவின்போது அனைத்து நாட்களிலும் காவிரி ஆரத்தி நடத்த திட்டமிட்டுள்ளோம். மற்ற மாதங்களில் வாரத்திற்கு மூன்று முறை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.
இதற்காக 10,000 இருக்கைகள் அமைக்கப்படும். ஆரத்தியை பார்க்க 70 சதவீதம் பேருக்கு இலவசம். மற்ற 30 சதவீதம் பேருக்கு குறைந்த டிக்கெட் கட்டணம். வாகனங்களை நிறுத்தவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
இறுதி மூச்சு இருக்கும் வரை... அன்புமணி செயல் தலைவர் தான்: ராமதாஸ் உறுதி
-
பயணியர் நிழற்குடை மீண்டும் அமைப்பு
-
உடைந்த குப்பை தொட்டி அகற்றி புதிதாக அமைக்கப்படுமா?
-
அண்ணனுார் சாலையில் வேகத்தடை வேண்டும்
-
குப்பையால் சுகாதார சீர்கேடு வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்து
-
நிழற்குடைக்கு கம்பங்களால் முட்டு அமைந்தகரை பயணியர் அச்சம்