விண்வெளியில் இருந்து வணக்கம்: இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா நெகிழ்ச்சி

1


புதுடில்லி: விண்வெளியில் இருந்து நமஸ்கார், மிக பெருமையாக உணர்கிறேன் என இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா தெரிவித்தார்.


இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் அடங்கிய குழுவினர் நேற்று விண்வெளி பயணம் மேற்கொண்டனர். விண்வெளி பயணம் மேற்கொள்ளும் இரண்டாவது இந்தியர், விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு பெற்றுள்ளார்.


சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நால்வரும் விண்வெளியில் 28 மணி நேரம் பயணம் செய்து, இன்று (ஜூன் 26) மாலை 4:30 மணிக்கு, பூமியில் இருந்து 400 கி.மீ., தொலைவில் இருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை அடைகின்றனர். அங்கு 14 நாட்கள் தங்கியிருந்து, ஆய்வு பணிகளை மேற்கொள்கின்றனர்.


அன்னப்பறவை பொம்மையை விண்வெளிக்கு சுக்லா எடுத்து சென்றுள்ளார். விண்கலத்தில் இருந்த படி கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா பேசியதாவது:


விண்வெளியில் இருந்து நமஸ்கார், மிக பெருமையாக உணர்கிறேன். இது மிகவும் அற்புதமான பயணம். சக விண்வெளி வீரர்களுடன் இங்கு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என் தனிப்பட்ட பயணம் அல்ல, சக வீரர்கள் ஒத்துழைப்போடு வெற்றியை நோக்கி பயணம் மேற்கொள்கிறேன். என்னை வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நன்றி.


எந்த வித சப்தமும் இல்லாமல் விண்வெளியில் மிதப்பது வியப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு இந்தியரும் என் இதயத்தில் இருக்கிறார்கள். அனுபவங்களை பகிர ஆர்வமுடன் இருக்கிறேன். சர்வதேச விண்வெளி மையத்தில் நேரத்தை செலவிட ஆவலாக உள்ளேன். ஒரு குழந்தையை போல் உணர்கிறேன். இவ்வாறு சுக்லா பேசினார்.

Advertisement