ஆசிரியர், அலுவலர்களுக்கு சம்பள பிரச்னையை தீர்க்க வலியுறுத்தல்

மதுரை: மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு தற்காலிக பணி நீட்டிப்பு உத்தரவு வழங்காததால் சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இம்மூன்று மாவட்டங்களிலும் உள்ள உயர், மேல்நிலைப் பள்ளிகள், அலுவலகங்களில் காலியாக உள்ள 389 பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் பணிநீட்டிப்புக்கான உத்தரவு வழங்க வேண்டும். தற்போதுள்ள உத்தரவு இம்மாதம் (ஜூன்) முடிகிறது. ஆனால் இதுவரை பணி நீட்டிப்பு உத்தரவை கள்ளர் சீரமைப்பு துறை வெளியிடவில்லை.

இதுகுறித்து தமிழ்நாடு உயர் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் அமைப்பு செயலாளர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், கல்வித்துறையில் இதுபோன்ற தற்காலிக பணியிடங்களுக்கு உரிய நீட்டிப்பு உத்தரவு வெளியிடுகின்றன.

கள்ளர் சீரமைப்பு துறையில் ஏற்கனவே கடந்தாண்டும் இதுபோல் தாமதமாக வெளியிடப்பட்டது.

இதனால் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. விரைவில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தற்காலிக பணியிடங்களை நிரந்தரமாக்க வேண்டும் என்றார்.

Advertisement