பதற்றத்தை குறைத்து உறவை மேம்படுத்த 4 திட்டங்கள்: சீனாவிடம் ராஜ்நாத் யோசனை

3

பீஜிங்: சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் டாங் ஜூனை சந்தித்த நமது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லையில் பதற்றத்தை குறைப்பது மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவது தொடர்பாக 4 திட்டங்களை தெரிவித்தார்.


சீனாவின் கிங்டாவோ நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.


இந்த மாநாட்டுக்கு இடையே, சீனா பாதுகாப்புத்துறை அமைச்சர் டாங் ஜூனை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேசினார். அப்போது, பீஹாரின் மதுபானி ஓவியத்தை பரிசாக ராஜ்நாத் வழங்கினார். மேலும், பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதம் குறித்த பிரச்னையை கிளப்பினார். இதற்கு பதிலடியாக இந்தியாவின், 'ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை பற்றியும் எடுத்துரைத்தார்.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளில் எல்லையில் பதற்றத்தை குறைத்து அமைதி நிலவவும், உறவை மேம்படுத்தவும் நான்கு திட்டங்களை ராஜ்நாத் விளக்கினார்.

அதன்படி,
1. 2024 ல் ஒப்புக் கொள்ளப்பட்ட படைகுறைப்பு திட்டத்தை பின்பற்றுதல்

2. பதற்றத்தை குறைப்பதற்கு தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்தல்

3. எல்லை வரையறை இலக்கை அடைவதற்கான முயற்சிகளை துரிதப்படுத்துதல்

4. கருத்து வேறுபாடுகளை குறைப்பதற்கும், உறவுகளை மேம்படுத்துவதற்கும் புதிய செயல்முறைகளை தயாரிக்க சிறப்பு பிரதிநிதிகளை பயன்படுத்துதல் ஆகிய திட்டங்களை எடுததுரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இந்த சந்திப்பு தொடர்பாக ராஜ்நாத் சிங் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டுக்கு இடையே சீன பாதுகாப்பு அமைச்சர் டாங் ஜூனை சந்தித்தேன். இரு தரப்பு உறவுகள் தொடர்பாக ஆக்கப்பூர்வமான கருத்துகளை பரிமாறி கொண்டோம்.
ஆறு ஆண்டுகளுக்கு பிறகு கைலாஷ் மானசரோவர் யாத்திரை துவக்குவதற்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்தேன். இரு தரப்பு உறவில் புதிய சிக்கல்களை தவிர்ப்பதுடன், நேர்மறையான தருணத்தை பராமரிப்பது இரு தரப்புக்கும் முக்கியம். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement