பொறுப்பு அதிகாரியை நியமிக்காததால் 3வது மண்டலத்தில் பணிகள் பாதிப்பு

தாம்பரம்,:தாம்பரம் மாநகராட்சி மூன்றாவது மண்டலம் செம்பாக்கத்தில், மண்டல குழு தலைவரின் பதவி பறிக்கப்பட்ட நிலையில், பொறுப்பு அதிகாரி நியமிக்கப்படாததால், அடிப்படை வளர்ச்சி திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

தாம்பரம் மாநகராட்சி, மூன்றாவது மண்டலம், செம்பாக்கம் மற்றும் சிட்லப்பாக்கம் - அஸ்தினாபுரத்தின் ஒரு பகுதியை உடையது. இம்மண்டலத்தில், 14 கவுன்சிலர்கள் உள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதியை மீறி செயல்பட்டதாக, மூன்றாவது மண்டல குழு தலைவரும், 40வது வார்டு கவுன்சிலருமான ஜெயபிரதீப்பின் பதவி, கடந்த மார்ச் மாதம் பறிக்கப்பட்டது.

அவருக்கு பின் பொறுப்பு அதிகாரி நியமிக்கப்படாததால், இம்மண்டலத்தில் அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, கவுன்சிலர்கள் கூறியதாவது:

இந்த மண்டலத்தில், மக்களின் அன்றாட பிரச்னைகளான குப்பை அகற்றுதல், குடிநீர், பொது சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பணிகள், கடந்த ஆறு மாதங்களாக சரியாக நடக்கவில்லை. அனைத்து பணிகளையும் கவனிக்கும் வகையில், பொறுப்பு அதிகாரி இல்லாததால், யாரிடம் புகார் தெரிவிப்பது என்பது தெரியவில்லை.

பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் அலுவலகம் வந்து புகார் தெரிவிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

ஏற்கனவே, இந்த மண்டலத்தில் கோஷ்டி பூசலால் பணிகள் முறையாக நடக்காத நிலையில், தற்போது மேலும் மோசமாகிவிட்டது. நடக்கும் பணிகளை பார்வையிட்டு, தேவையான குறைகளை நிவர்த்தி செய்யவும் அதிகாரி இல்லை. 43, 44 ஆகிய வார்டுகளில், தார்ச்சாலை பணி நடக்கிறது.

இப்பணி சரியாக நடக்கவில்லை என நலச்சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். அப்படியிருந்தும் அந்த பணியை யாரும் பார்வையிடவில்லை.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இம்மண்டலத்திற்கு பொறுப்பு அதிகாரியை நியமித்து, மக்கள் பணி தடையின்றி நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement