இயந்திர நடவுக்கு மானியம் விவசாயிகளுக்கு அழைப்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், இயந்திர நடவுக்கு மானியம் பெற, வரும் ஜூலை 31க்குள் விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், நெல் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு நடவு பணியை எளிதாக்கும் வகையில், இயந்திர நடவு மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறது.

2021ம் ஆண்டிலிருந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆண்டுதோறும் சீரான மழைப்பொழிவு உள்ளது. இதனால், விவசாயிகள் நெல் பயிரிட ஆர்வம் காட்டிவருகின்றனர்.

நடவு பணிக்கு விவசாய கூலி தொழிலாளர்கள் கிடைக்காதது, நெல் சாகுபடிக்கு சிக்கலாக இருந்து வருகிறது. இதற்கு தீர்வாக, இயந்திர நடவு ஊக்குவிக்கப்படுகிறது.

இயந்திர நடவுக்காக சிறப்பு வகை நாற்றங்கால் அமைக்கவும், விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

நடப்பு சொர்ணவாரி பட்டத்தில், 5,000 ஏக்கரில் இயந்திர நெல் நடவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இயந்திர நெல் நடவு செய்வதற்கு ஒரு விவசாயிக்கு, ஒரு ஏக்கருக்கு 4,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் நெல் விதைகள், நுண்ணுட்ட உரக்கலவை மற்றும் உயிர் உரங்கள் அதிகபட்சம் 2.5 ஏக்கர் வரையில் பெற்று பயனடையலாம்.

இயந்திர நடவு மேற்கொள்ளும் விவசாயிகள், உழவர் செயலியின் மூலம், ஆன்லைனில் வரும் ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Advertisement