கத்திவாக்கம் பஜாரில் கடைகளை அகற்ற எதிர்ப்பு மாற்று ஏற்பாடு செய்ய அ.தி.மு.க., கோரிக்கை

எண்ணுார்:கத்திவாக்கம் பஜாரில், சாலையோர கடைகளை அகற்றுவதற்கு, வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாற்று ஏற்பாடு செய்யாமல், கடைகளை அகற்றக் கூடாது என, அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.,வும் கோரிக்கை விடுத்தார்.

எண்ணுார், கத்திவாக்கம் பஜாரில் நெடுஞ்சாலையோரம், 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

பல்வேறு திட்டப் பணிகளை காரணம் காட்டி, நேற்று காலை ஆக்கிரமிப்புகள் எனக்கூறி, சாலையோர கடைகளை அகற்றும் பணியில், நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் ஷெரிப், திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில், 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள், சாலையோர கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட முயன்றனர்.

தகவலறிந்த அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன், சி.பி.ஐ.எம்., கவுன்சிலர் ஜெயராமன் உள்ளிட்டோர் அங்கு வந்து, 30 ஆண்டுகளாக கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கு, எந்தவொரு மாற்று ஏற்பாடும் செய்யாமல், அதிரடியாக கடையை அகற்றுவது ஏற்புடையதல்ல.

நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், வியாபாரிகளின் நிலைமை குறித்து கேட்டறிய வேண்டும்; மாற்று ஏற்பாடு செய்துக் கொடுக்க வேண்டும் என, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின், கடைகளை அகற்றும் பணி, அடுத்த வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எண்ணுார் உதவி கமிஷனர் வீரகுமார் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Advertisement