லாரியில் இருந்து சிதறும் ஜல்லியால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஸ்ரீபெரும்புதுார்:அளவிற்கு அதிகமாக ஜல்லி கற்களை ஏற்றி செல்லும் லாரியில் இருந்து சாலையில் சிதறும் ஜல்லி கற்களால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை வழியே, ஒரகடம், வல்லம் - வடகால், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில், புதிதாக தொழிற்சாலை மற்றும் வீடு கட்டுமான பணிக்காக, ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு ஏராளமான லாரிகள் தினமும் சென்று வருகின்றன.
அவ்வாறு செல்லும் லாரிகளில், வழக்கத்தை விட அளவுக்கு அதிகமாக ஜல்லி கற்களை ஏற்றி செல்வதால், லாரிகளில் இருந்து ஜல்லி கற்கள், சாலையில் சிதறி விழுகிறது.
இதனால், இந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள், ஜல்லி கற்கள் மீது செல்லும் போது, இடறிவிழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, அளவுக்கு அதிகமாக ஜல்லி கற்களை ஏற்றி கொண்டு செல்லும் லாரிகள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சாலையில் சிதறியுள்ள ஜல்லி கற்கள் குவியலை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.