கிரஷர் புழுதியால் வாகன ஓட்டிகள் அவதி

அருங்குன்றம்:உத்திரமேரூர் ஒன்றியத்தில் திருமுக்கூடல் - சாலவாக்கம் சாலை, மதுார் - சிறுமையிலுார் சாலை, பழவேரி மற்றும் பினாயூர் உள்ளிட்ட கிராம சாலைகளை ஒட்டி ஏராளமான கல் அரவை தொழிற்சாலைகள் இயங்குகின்றன.

இந்த தொழிற்சாலைகளில், கல் அரைக்கும் இயந்திரங்களில் முறையாக தண்ணீர் ஊற்றி அரைக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.

இதனால், தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை மாதிரியான புழுதிகள், சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பரவுகிறது.

சாலைகளில் பரவும் புழுதியால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் மக்கள் அவதிப் படுகின்றனர்.

மேலும், லோடு ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் சாலைகள் பழுதடைந்து மண் புழுதிகள் பறந்தபடி உள்ளது.

இதுகுறித்து, அருங்குன்றம் கிராம மக்கள் கூறியதாவது:

கிரஷர் புழுதி மற்றும் மண் புழுதி சாலைகளில் பரவுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திக்குள்ளாவதோடு, பல தரப்பு மக்களும் சுவாச கோளாறு, நுரையீரல் நோய், மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகளால் அவதி படுகின்றனர்.

இதனால், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதிகளைச் சேர்ந்த குழந்தை முதல், முதியோர் வரை பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே, சாலைகளில் பரவும் புழுதிகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement