பள்ளப்பட்டியில் விழிப்புணர்வு பேரணி

அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரவக்குறிச்சி காவல்துறையினர் இணைந்து நடத்திய, போதை விழிப்புணர்வு உறுதிமொழி, பேரணி நடைபெற்றது.
சர்வதேச போதை பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை உதவி தலைமை ஆசிரியர் தாஜூதீன் வாசிக்க மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.


கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராமமூர்த்தி, லாரன்ஸ் மற்றும் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி, திண்டுக்கல் ரோடு, புளியமரத்தெரு, ஹபீப் நகர் வழியாக ஷாநகர் கார்னர் வழியாக பள்ளியை அடைந்து நிறைவடைந்தது. பொது மக்களிடம் போதை பொருள் தொடர்பான விழிப்புணர்வை மாணவ,மாணவியர் ஏற்படுத்தினர்.பள்ளப்பட்டி நகராட்சி கமிஷனர் ஆர்த்தி, அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், எஸ்.ஐ., ராஜாசேர்வை, நகராட்சி ஆய்வாளர் இஸ்மாயில் ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர். மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மலைக்கோவிலுார் மருத்துவ அலுவலர் ஜெயஸ்ரீ, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் டேனியல், சுகாதார ஆய்வாளர்கள் லெனின், தாமோதரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முஹம்மது ஹாரிஸ் அலி, தேசிய மாணவர் படை அலுவலர் முஹம்மது இஸ்மாயில், போதை ஒழிப்பு மன்ற பொறுப்பாளர் முஹம்மது தாஹீர் உசேன் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement