ஜல்லி கொட்டி பல மாதங்களாகியும் தார்ச்சாலையாக மாறாத அவலம்

நாமகிரிப்பேட்டை: ஜல்லி கொட்டி பல மாதங்களாகியும் இன்னும் சாலை அமைக்காததால் விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனர்.


நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து, வெள்ளக்கல்பட்டியில் இருந்து மூலப்பள்ளிப்பட்டி ஊராட்சிக்கு செல்ல, மாதாகோவில் காலனி வழியாக மலைப்பாதை இருந்தது. பெரிய பாறைகள், கற்கள், பள்ளம் மேடாக இருந்தது. இவ்வழியாக டூவீலர், சைக்கிளில் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால், நாமகிரிப்பேட்டை, வெள்ளக்கல்பட்டிக்கு வரும் விவசாயிகள், மாணவ, மாணவியர் ஆத்தூர் பிரதான சாலை, கும்பக்கொட்டாய், தண்ணீர் பந்தல்காடு வழியாக சுமார், 7 கி.மீ., சுற்றி வரவேண்டும்.

இதனால் ஆவாரங்கொரை, மாதாகோவில் வழியாக சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்த செய்தி நமது நாளிதழில் வெளியானது. இந்நிலையில், மாதாகோவில் காலனி வழியாக செல்ல, 1.7 கி.மீட்டருக்கு, 1.22 கோடி ரூபாய் செலவில் சாலை ஜல்லி கொட்டப்பட்டது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஜல்லி கொட்டியும் இன்னும் அடுத்த கட்டப்பணிகள் எதுவும் நடக்கவில்லை. ஜல்லியாக உள்ளதால் இவ்வழியாக செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். எனவே, விரைவில் தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement