பிரபல மொபைல் ஷோரூமில் கைவரிசை காட்டிய காசாளர் கைது

நீலாங்கரை:நீலாங்கரையில் உள்ள பிரபல மொபைல் ஷோரூமின் பூட்டை உடைத்து, 1.25 லட்சம் ரூபாய், விலை உயர்ந்த மொபைல் போன்கள் திருடிய காசாளர் சிக்கினார்.

சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, வெட்டுவாங்கேணியில், 'சென்னை மொபைல்ஸ்' ஷோரூம் இயங்கி வருகிறது. கடந்த 13ம் தேதி கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு, 1.25 லட்சம் ரூபாய், ஆறு ஐ - போன்கள், இரண்டு சாம்சங் மொபைல் போன்கள் திருடு போனது தெரியவந்தது.

இது தொடர்பாக ஷோரூம் மேலாளர் பிரேம்குமார், 30, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

நீலாங்கரை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டனர்.

இதில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக காசாளராக பணி புரிந்த முகமது தல்கா, 28, என்பவர், திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை காவல்நிலையம் அழைத்து சென்று, தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், அவர் பணம், மொபைல் போன்களை திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும், வெட்டுவாங்கேணி கடற்கரை பகுதியில் ஐ - போன், மொபைன் போன்களை புதைத்து வைத்துள்ளதாகவும், பணத்தில் சிறிது செலவு செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து, அவரை வெட்டுவாங்கேணி கடற்கரை அழைத்து சென்று, புதைத்து வைத்திருந்த ஐ - போன், மொபைல் போன்களை மீட்டனர். அவரிடம் இருந்து, 1.07 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டது.

இதையடுத்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement