கூமாபட்டிக்கு போட்டியாக குருவித்துறை

மதுரை: விருதுநகர் கூமாபட்டி சுற்றுலா தலத்திற்கு 'ரீல்ஸ்' மூலம் 'டிரெண்டிங்' செய்த இளைஞருக்கு போட்டியாக மதுரை இளைஞர்கள் சோழவந்தான் தென்கரை அருகே உள்ள குருவித்துறை சிற்றணையில் அருவி போல் வழியும் நீரை காண்பித்து 'ரீல்ஸ்' வெளியிட்டு வருகின்றனர்.
மதுரை - திண்டுக்கல் பகுதிகளை இணைக்கும் வகையில் சோழவந்தான் தென்கரை அருகே வைகையாற்றின் குறுக்கே 710 மீட்டரில் அரைவட்ட வடிவில் சிற்றணை கட்டப்பட்டுள்ளது. ஆண்டில் ஒன்பது மாதங்கள் வரை தண்ணீர் அருவியாய் கொட்டும். சோழவந்தான் பாசன கால்வாயின் குறுக்கே பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட இந்த சிற்றணை நீர்ப்பாசன மேலாண்மைக்கான பழந்தமிழரின் எடுத்துக்காட்டாக உள்ளது. ஐந்து பெரிய படிக்கட்டுகளாக தண்ணீர் வழிந்தோடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் மழை பெய்யும் காலங்களில் தண்ணீர் அருவி போல கொட்டுவதை பார்ப்பதே அழகு.
ஆற்றின் கரையில் இருந்து ஓரடி நீள அகலமுள்ள 25 படிக்கட்டுகளின் வழியாக கீழே இறங்கினால் படிக்கட்டு போன்ற பகுதியில் அமர்ந்து குளிக்கலாம். ஆற்றிலும் இறங்கலாம். ஓராண்டாக இப்பகுதிக்கு வரும் உள்ளூர் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்த இடத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது.
நீர்வளத்துறைக்கு சொந்தமான ஆற்றின் கரைப் பகுதியில் அகலமாக படித்துறை, அருகில் கழிப்பறை, உடை மாற்றும் அறை அமைக்க வேண்டும் என நீர்வளத்துறை மூலம் சுற்றுலாத்துறைக்கு நிதி திட்ட மதிப்பீடு குறித்து அனுப்பப்பட்டது. அகலமான ஆற்றின் கரையில் பார்க்கிங் வசதியும் உள்ளது.
அறிவிக்கப்படாத சுற்றுலா தலமாக மாறிய சிற்றணை குறித்து இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
ஒரு சிலர் 'கூமாபட்டிக்கு போகாதீங்க. குருவித்துறைக்கு வாங்க' என்று கோரஸாக பேசி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். தற்போது 'குருவித்துறை' வீடியோ 'டிரெண்டிங்' ஆகியுள்ளது.


மேலும்
-
ஜானகி பெயரை படத் தலைப்பாக ஏன் வைக்கக் கூடாது? கேரள ஐகோர்ட் கேள்வி
-
2 மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து குடங்களுடன் மறியல்
-
கொல்லிமலையில் 700 பேருக்கு வீடு: எம்.பி., ராஜேஸ்குமார் தகவல்
-
ஜல்லி கொட்டி பல மாதங்களாகியும் தார்ச்சாலையாக மாறாத அவலம்
-
மத்திய அரசு திட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு பயிற்சி
-
15 நாட்களாக குடிநீர் 'கட்' தில்லை நகர் மக்கள் அவதி