15 இடத்தில் இரும்பு 'ஷட்டர்'கள் திருட்டு கண்டுகொள்ளாத போலீசுக்கு கண்டனம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கச்சமங்கலம் அணையில் இருந்து வெண்ணாற்றின் கிளையாக ஆனந்தகாவேரி வாய்க்கால் பிரிக்கிறது. இக்கால்வாய், 21 கி.மீ., பயணித்து, கள்ளபெரம்பூர் ஏரியில் முடிவடைகிறது. இந்த வாய்க்காலால், 6,004 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

இந்நிலையில் ஆனந்தகாவேரி வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்காலில் இருந்து 15 இடங்களில் இரும்பு ஷட்டர்கள், கம்பி, தண்டவாளங்களை மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.

இது குறித்து வெண்ணாறு பிரிவு 'லஸ்கர்' நந்தகுமார், பூதலுார் போலீசில், புகார் அளித்தார்.

புகாரை பெற்ற போலீசார், வழக்கு பதிவு செய்யவில்லை. இதையடுத்து, கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம், நீர்வளத்துறை அதிகாரிகள் நேற்று முறையிட்டனர்.

காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ரவிச்சந்தர் கூறியதாவது:

கடந்த 23ம் தேதி, ஆனந்தகாவேரி வாய்க்கால்களில் தண்ணீரை திறக்க நீர்வளத்துறை அதிகாரிகள் சென்ற போது, ஆனந்தகாவேரி வாய்க்கால், சித்தாயல் வாய்க்கால் என, 15 இடங்களில், இரும்பு ஷட்டர்கள், கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்து திடுக்கிட்டனர்.

இது தொடர்பாக, போலீசில் லஸ்கர் புகார் அளித்தும் கண்டுகொள்ளாதது கண்டனத்துக்குரியது.

ஷட்டர்கள் இல்லாத சூழலில், பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால், 20 கிராம விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு உடனே புதிய ஷட்டர்களை பொருத்தி, வீணாகும் தண்ணீரை தடுக்க வேண்டும். ஷட்டர்களை திருடியவர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement