மகள் கழுத்தறுத்து கொலை கொடூர தந்தை கைது

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மகளை கழுத்து அறுத்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த டி.மடப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன், 46, கூலித் தொழிலாளி. இவரது மகள் அபிதா, 27, பட்டப்படிப்பு படித்து முடித்து காட்டுமன்னார்கோவிலில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தார்.

அர்ஜுனன் கடந்த சில மாதங்களாக தன் மகளுக்க மாப்பிள்ளை பார்த்து வந்தார். அபிதா, திருமணத்தை தள்ளி போட்டு வந்தார். இதனால் தந்தைக்கும், மகளுக்கும் பிரச்னை ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று அர்ஜுனன் மனைவி ரேஷன் கடைக்கு சென்று விட்டார். அர்ஜுனன், அபிதா வீட்டில் இருந்தனர்.

அப்போது, மகளின் காதல் விவகாரம் தெரிய வரவே மீண்டும் தந்தை, மகளுக்கு தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அர்ஜுனன், அபிதாவை கட்டையால் தாக்கியும், பேனா கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்தார்.

புகாரின் படி, போலீசார் வழக்குப் பதிந்து அர்ஜுனனை கைது செய்து, விசாரிக்கின்றனர்.

Advertisement