சென்னை ஐ.ஐ.டி., மாணவி பாலியல் வழக்கு; மகளிர் ஆணையம் விசாரணை

5


சென்னை: சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கை, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.


சென்னை ஐ.ஐ.டி.,யில், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், தொழில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த 25ம் தேதி இரவு திறந்தவெளி அரங்கம் பின்புறம் நடந்து சென்றார். அப்போது 'மும்பை சாட்' என்ற கடையில் வேலை பார்த்து வரும் ரவுஷன் குமார், 22, என்பவர், கையில் மரக்கட்டையை வைத்துக் கொண்டு, மாணவியின் கையை பிடித்து இழுத்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார்.

சாமர்த்தியாக, அவரிடம் இருந்து தப்பிய மாணவி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர்கள் இருவரை அழைத்து வந்துள்ளார். அப்போது வாலிபர் மறைந்துக் கொண்டார். நேற்று மதியம் சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீஸ் ஸ்டேஷனில் மாணவி புகார் அளித்தார். கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜா, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.



பின் மாணவியிடமும், சில்மிஷத்தில் ஈடுபட்ட பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ரவுஷன் குமாரிடமும், காவலாளி நிர்வாக அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, ரவுஷன் குமாரை போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு உடனடி மருத்துவ உதவி கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement