கேரளாவில் கொலை; தமிழக வனத்தில் சடலம் புதைப்பு; ஆர்.டி.ஓ., முன்னிலையில் தோண்டி எடுப்பு

பந்தலூர்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஒன்றரை ஆண்டுக்கு முன் ஒருவரை கொலை செய்த கும்பல், தமிழக வனப்பகுதியில் உடலை புதைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரள போலீசார், வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
கேரள மாநிலம் மெடிக்கல் காலேஜ் போலீஸ் நிலையத்தில் ஹேமச்சந்திரன், 53, என்பவர், ஒன்றரை ஆண்டுக்கு முன் காணாமல் போனார். அவரது மனைவி அளித்த புகாரில் போலீசார் தேடி வந்தனர். அவரை கொலை செய்த கும்பல், தமிழகத்திற்கு உட்பட்ட நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே, கோழிக்கோடு செல்லும் நெடுஞ்சாலையை ஒட்டி வனப்பகுதியில் புதைத்து விட்டனர். போலீஸ் விசாரணையில் இந்த சம்பவம் தெரியவந்தது.
இதையடுத்து, கோழிக்கோடு உதவி காவல் ஆணையர் உமேஷ் தலைமையிலான போலீசார், கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் மூலம் இப்பகுதிக்கு வந்து அடக்கம் செய்த இடத்தை கண்டறிந்தனர். இன்று காலை உதவி காவல் ஆணையர் தலைமையிலான கேரளா மாநில போலீசார், கூடலூர் ஆர்.டி.ஓ. குணசேகரன், தேவாலா டி.எஸ்.பி. ஜெயபாலன், தாசில்தார் சிராஜுநிஷா, வனச்சரகர் அய்யனார் தலைமையிலான குழுவினர், நேரில் வந்தனர்.
பிணம் அடக்கம் செய்த இடத்தை மோப்ப நாய்கள் மாயா, மர்பி உதவியுடன் தோண்டி விசாரணை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு பின் சதுப்பு நிலத்தில் 4 அடி ஆழமுள்ள குழியிலிருந்து இறந்தவரின் உடல் பாகங்களை மீட்டனர்.
போலீசார் கூறியதாவது: கொல்லப்பட்டவர் கேரளா மாநிலம் சுல்தான்பத்தேரி நடபாலம் அருகே பூமலை பகுதியை சேர்ந்தவர். கடந்த 2024., ஏப். 1ம் தேதி கோழிக்கோடு சென்றவரை காணவில்லை என்று அவரின் மனைவி சுபிஷா புகார் கொடுத்தார்.
விசாரணை செய்து, தற்போது உடலை கண்டெடுத்து உள்ளோம். இந்த கொலையில் 4- பேர் ஈடுபட்டனர். தலைமறைவு கொலை குற்றவாளிகளை தேடி வருகிறோம். இவ்வாறு கேரளா போலீசார் தெரிவித்தனர்.
மேலும்
-
பட்டும் திருந்தாத பாகிஸ்தான்: இந்தியா தாக்கி அழித்த பயங்கரவாத முகாம்களை மீண்டும் அமைப்பது கண்டுபிடிப்பு
-
' ரா ' உளவுப்பிரிவின் தலைவராக பராக் ஜெயின் நியமனம்
-
70 வயது பெண் மருத்துவரிடம் சைபர் குற்றவாளிகள் ரூ.3 கோடி மோசடி
-
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 13 ராணுவ வீரர்கள் பலி
-
வி.சி.க., காங்கிரசுக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? அன்புமணி சந்தேகம்
-
மலேசியா டூ திருச்சி; விமானத்தில் கடத்தி வரப்பட்ட அணில் குரங்கு பறிமுதல்; சுங்கத்துறை நடவடிக்கை