சத்துணவில் புழு, பூச்சி நெளிகிறது; உணவில் அலட்சியம் ஏன்? நயினார் ஆவேசம்

சென்னை: சத்துணவில் புழு, பூச்சி நெளிகிறது. ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் இத்தனை அலட்சியம் ஏன்? என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி கிடந்ததாகவும், அதை உட்கொண்ட நாற்பது மாணவர்களுள் நான்கு மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வெளியாகியுள்ள செய்தி வேதனையளிக்கிறது.
தாராபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள அரசு பள்ளிகளில் அரசு காலை உணவு திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படும் உணவுகள் அனைத்தும் சுமார் 37 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காங்கேயத்தில் இருந்து தயார் செய்து கொண்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
பள்ளிகளில் உள்ள சத்துணவு கூடங்களிலேயே காலை உணவையும் தயாரிப்பதை விட்டுவிட்டு எதற்காக அத்தனை தூரத்திலிருந்து உணவு கொண்டு வரப்படுகிறது? சத்துணவு ஊழியர் பற்றாக்குறையின் காரணமாகவா? தொலைதூரத்தில் இருந்து கொண்டு வரப்படும் உணவு சுகாதாரமானதாகவும் சூடானதாகவும் இருக்குமா?
“சத்துணவில் புழு, பூச்சி நெளிகிறது” என சில தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளி குழந்தைகள் வேதனையுடன் பகிர்ந்த நிலையில், மீண்டும் அதே போன்றதொரு சம்பவம் நடந்துள்ளது. தி.மு.க., அரசின் நிர்வாகக் குளறுபடிகளையே குறிக்கிறது. ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் இத்தனை அலட்சியம் ஏன்?
எனவே, தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள காலை உணவு திட்டத்தின் மீது தி.மு.க., ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதாது அதை முறையாகவும் செயல்படுத்த வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும்
-
மக்களை அழிப்பவர் தேஜஸ்வி: பிரசாந்த் கிஷோர் தாக்கு
-
காஷ்மீர் சிறப்பு சட்டம் அம்பேத்கரின் கொள்கைக்கு எதிரானது:தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்
-
கோப்பை வென்றது இலங்கை: வங்கதேசம் இன்னிங்ஸ் தோல்வி
-
பட்டும் திருந்தாத பாகிஸ்தான்: இந்தியா தாக்கி அழித்த பயங்கரவாத முகாம்களை மீண்டும் அமைப்பது கண்டுபிடிப்பு
-
' ரா ' உளவுப்பிரிவின் தலைவராக பராக் ஜெயின் நியமனம்
-
70 வயது பெண் மருத்துவரிடம் சைபர் குற்றவாளிகள் ரூ.3 கோடி மோசடி