சைபர் கிரைம் ஒரு வகை நிழல் போர்;அதை தடுக்க நவீன உத்தி தேவை: சொல்கிறார் திரிபுரா முதல்வர்

அகர்தலா: சைபர் கிரைம் ஒரு வகையான நிழல் போர், அதை தடுக்க, தகுந்த பாதுகாப்பு மற்றும் நவீன உத்திகளை கையாள வேண்டும் என்று திரிபுரா முதல்வர் மாணிக் சஹா கூறினார்.

அகர்தலாவில் இன்று மாநிலத்தின் முதல் சைபர் காவல் நிலையத்தை திறந்து வைத்து முதல்வர் மாணிக் சஹா பேசியதாவது:

வங்க தேசத்தில் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இங்கு பாதுகாப்பையும், கண்காணிப்பையும் அதிகரிக்க வேண்டும்.திரிபுரா மூன்று பக்கங்களிலும் வங்கதேசத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பை வலுப்படுத்துவது அவசியம்.

வங்கதேசத்தின் தற்போதைய நிலைமையை நாம் அனைவரும் அறிவோம். பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. வடகிழக்கு மாநிலம் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கான ஒரு வழித்தடமாக மாறி இருக்கிறது. எல்லைக்கு அப்பால் இருந்து ஊடுருவுவதும் மற்றொரு பிரச்சனையாக இருக்கிறது.


ஒரு மொபைல் போன் ஏ.கே-47 துப்பாக்கிகளை விட ஆபத்தானதாகிவிட்டது. மேம்பட்ட தொழில்நுட்பம் போர், மோதல் அல்லது போரின் வடிவத்தை மாற்றிவிட்டது,சைபர் கிரைம் என்பது ஒரு வகையான நிழல் போர், மோசடி நடவடிக்கைகளைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் குற்றவாளிகளை டிஜிட்டல் முறையில் எதிர்த்துப் போராட வேண்டும்.

சைபர் மோசடி நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை வலியுறுத்திய சஹா, டிஜிட்டல் தளங்களில் மோசடி நடவடிக்கைகளைத் தடுக்க பாதுகாப்பு அமைப்புக்கள் தங்கள் திறன்களை மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு மாணிக் சஹா பேசினார்.

Advertisement