மாந்ரீகத்துக்காக நாயை கொன்று உடன் வசித்த பெண்: பெங்களூருவில் அதிர்ச்சி

பெங்களூரு: மாந்ரீகத்துக்காக வளர்த்த நாயை கொன்று, அதனுடன் சில நாட்கள் வசித்து வந்த பெண்ணை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த பெண் வீட்டில் இருந்து 2 நாய்கள் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மஹாதேவபுராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4 வது மாடியில் உள்ள, ஒரு வீட்டில் இன்று காலை பயங்கர துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டினர், அந்த வீட்டின் கதவை தட்டி, அங்கிருந்த பெண்ணிடம் விசாரித்தனர். ஆனால், அந்த பெண் பதிலளிக்காமல் கதவை அடைத்துவிட்டார்.
இது குறித்து அவர்கள் மஹாதேவபுரா போலீசில் புகார் அளித்தனர். போலீசார், அந்த ணெ்ணின் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, இரண்டு நாய்கள் மயங்கிய நிலையில் கிடந்தன. துர்நாற்றம் வீசிய இடத்தில் துணி பண்டலுக்குள் அழுகிய நிலையில், ஒரு நாய் செத்து கிடந்தது. இதுபற்றி மாநகராட்சியின் கால்நடை துறைக்கு, போலீசார் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள், செத்து கிடந்த நாயை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மயங்கிய நிலையில் கிடந்த இரண்டு நாய்களும் மீட்கப்பட்டு, கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிபர்ணா, 34 என்ற அந்தப் பெண்ணிடம் நாய் எப்படி செத்தது என்று கேட்ட போது, அவர் பதில் சொல்லவில்லை.பிரேத பரிசோதனை அறிக்கையில், நான்கு நாட்களுக்கு முன்பே, கத்தியால் கழுத்தை அறுத்து நாயை கொன்றதும், இறந்தது லாப்டரோர் இன நாய் என்றும் தெரிந்தது.
திரிபர்ணா தனது அறையில் சாமி படங்கள் முன்பு மஞ்சள், குங்குமம், எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்ததும் தெரியவந்தது. மாந்ரீகம் செய்யும் முயற்சியில் நாயை கொன்று இருக்கலாம் என்று, போலீசாருக்கு சந்தேகம் எழுந்து உள்ளது. அவர் மீது விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. விசாரணை நடக்கிறது.
