'மற்ற மாவட்டங்களுக்கு திருப்பூர் முன்னுதாரணம்'

திருப்பூர், : 'பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சியில் தொடர்ந்து முதல் மூன்று இடங்களுக்குள் பெற்று, திருப்பூர் மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணம், எடுத்துக்காட்டாக உள்ளது,' என அமைச்சர் மகேஷ் பாராட்டியதால், மாவட்ட கல்வித்துறையினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மாநில அடைவு தேர்வு செயல்பாடு எப்படி என்பது குறித்து, தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனை கூட்டம், திருப்பூர் லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கலெக்டர் மனிஷ்நாரணவரே தலைமை வகித்தார்.

முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) காளிமுத்து, உடுமலை அமராவதி நகர் ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் இளங்கோ, திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அமித் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை வரவேற்றார்.

கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேசியதாவது:

தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில், அவிநாசி, குண்டடம் வட்டாரங்கள் அடைவு திறனில் ஓரளவு தேர்ச்சி பெற்றுள்ளன. திருப்பூர் தெற்கு, பல்லடம், மூலனுார் வட்டாரம் பின் தங்கியுள்ளன. திருப்பூர் மாவட்டம், 29வது இடம் பெற்றிருக்கிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதல் மூன்று இடங்களுக்கு தொடர்ந்து பெற்று, பிற கல்வி மாவட்டங்களுக்கு உதாரணமாக திருப்பூர் திகழ்ந்து வருகிறது.

அத்தகைய கல்வி மாவட்டம், மாநில அடைவு திறன் தேர்வில், பின்தங்கியிருப்பது, மாணவர்கள் புரிந்து படிக்கவில்லை என்பதை காட்டுகிறது. துவக்க, நடுநிலைப்பள்ளியில் பொருள்புரிந்து படிக்க, கற்றுத்தர வேண்டியது ஆசிரியரின் கடமை.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

முன்னதாக, மாநில அடைவு திறன் தேர்ச்சி சதவீதம் சரிவு, இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, தலைமையாசிரியர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

Advertisement