சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவு

1

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது.


கோல்கட்டாவில், தெற்கு கோல்கட்டா சட்டக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு படித்த 24 வயதான மாணவி நேற்று முன்தினம் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக அக்கல்லூரி முன்னாள் மாணவரும் ஆளும் திரிணமுல் காங்., மாணவர் பிரிவு நிர்வாகியுமான மோனோஜித் மிஸ்ரா, ஜைப் அகமது, பிரமித் முகர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரிக்க போலீஸ் துணை கமிஷனர் தலைமையில் 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவினர் விரைவில் விசாரணையை துவக்க உள்ளனர்.


மேலும் ஒருவர் கைது


இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக சட்டக்கல்லூரியின் காவலாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் கைது எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.


தலைமை செயலருக்கு கடிதம்

தேசிய பெண்கள் கமிஷன், மேற்கு வங்க தலைமை செயலருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அக்கடிதத்தில், இச்சம்பவம் கொடூரமானது என தெரிவித்துள்ள கமிஷன் தலைவர் விஜயா ரஹத்கர், மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விரைவாக விசாரணை நடத்துவதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை, தேசிய பெண்கள் கமிஷன் உறுப்பினர்கள் சந்திக்க நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளார்.


மருத்துவ அறிக்கையில் உறுதி


பாதிக்கப்பட்ட மாணவிக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில், அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement