'தண்ணீர் பெல்' திட்டம் ஓசூர் அரசு பள்ளி முன்மாதிரி

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நேற்று முன்தினம் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் கூறுகையில், ''கேரளாவை போல், தமிழக அரசு பள்ளிகளில் மாணவ - மாணவியர் தண்ணீர் அருந்த குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க, தண்ணீர் பெல் திட்டத்தை செயல்படுத்த, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும்,'' என, தெரிவித்தார்.

ஆனால், தமிழகத்திற்கே முன்மாதிரியாக, ஓசூர் ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், தண்ணீர் பெல் திட்டம், ஓராண்டாக நடைமுறையில் உள்ளது. இங்கு, 2,150 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். தலைமையாசிரியராக நர்மதாதேவி உள்ளார்.

இங்கு காலை, 10:30 மணி மற்றும் மதியம், 2:30 மணிக்கு தண்ணீர் குடிக்க, பெல் அடிக்கப்படுகிறது. அந்நேரத்தில் மாணவ - மாணவியர் தண்ணீர் அருந்த வேண்டும். அதற்காக பள்ளியில் ஆர்.ஓ., வசதி பெரியளவில் செய்யப்பட்டுள்ளது.

தண்ணீர் குடித்த பின் அவர்கள் கழிப்பறையை பயன்படுத்துவர். அதை சுத்தமாக பராமரிக்க, மாநகராட்சி நிர்வாகம் வழங்கிய, ஆறு துாய்மை பணியாளர்களால் தினமும் மூன்று முறை கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படுகின்றன. அதை ஆசிரியர்கள் கண்காணிக்கின்றனர்.

Advertisement