தி.மு.க., ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு இல்லை: நயினார் நாகேந்திரன், அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: ''தி.மு.க., ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தாலே ஏழை, எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்ததாக தெரிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மடப்புரம் பத்ரகாளியம்மன் திருக்கோவிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமாரை விசாரணை எனும் போர்வையில் அழைத்துச் சென்று, 7 போலீசார் இணைந்து 2 நாட்களாக அடித்துத் துன்புறுத்தியதால் அவர் உயிரிழந்ததாக உறவினர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இது லாக்-அப் மரணமோ என்ற சந்தேகத்தை வலுவாக எழுப்புகிறது.
@twitter@https://x.com/NainarBJP/status/1939200197319630862twitter
வாக்குமூலம்
கடந்த வாரம் பாலியல் தொல்லை குறித்து புகாரளிக்க வந்த கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை போலீசார் தாக்கிய நிலையில், தற்போது தன்னையும் தன் சகோதரரையும் வண்டியில் அழைத்து செல்லும் வேளையிலும் பின்னால் கயிறு கட்டி தாக்கியதாக உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் வாக்குமூலம் அளித்திருப்பது காவல்துறையின் அதிகரித்துவரும் குரூரப் போக்கை வெளிப்படுத்துகிறது.
தீவிர விசாரணை
தி.மு.க., ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தாலே ஏழை, எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. போலீசாரின் அராஜகப் போக்கிற்கு மேலும் பல உயிர்கள் பலியாகும் முன், சட்டம் ஒழுங்கை தன் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், உடனடியாக இவ்விஷயத்தில் தீவிர விசாரணை நடத்தி, உயிரிழந்தவரின் இறப்புக்கு தக்க நியாயம் பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
அண்ணாமலை கண்டனம்
இது குறித்து தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 29 வயது இளைஞர் அஜித், போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொலையை மூடிமறைக்கும் வேலையில், போலீசாரும், அந்தப் பகுதி தி.மு.க.,வினரும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
ராஜமரியாதை
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் தி.மு.க.,வினர், போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் தி.மு.க.,வினர் யாரும், போலீசார் விசாரணையின்போது தாக்கப்படுவதில்லை. ராஜமரியாதையுடன் நடத்தப்படுகின்றனர். சிறு சிறு குற்றங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் அப்பாவிகளை போலீசார் விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்குவது, தி.மு.க., ஆட்சியில் மிகவும் அதிகரித்துள்ளது.
23 பேர் மரணம்
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 2022ம் ஆண்டிலிருந்து, 23 பேர் போலீசார் விசாரணையின்போது மரணமடைந்துள்ளனர். ஆனால், முதல்வர், இது குறித்து எந்தக் கவலையுமின்றி இருக்கிறார். தமிழகத்தில், ஆளுங்கட்சியினர், அமைச்சர்களின் நண்பர்கள் குற்றம் செய்தால், அவர்களைக் காப்பாற்ற, பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டும் தி.மு.க., அரசு, ஏழை எளிய மக்கள் என்றால், அவர்கள் உயிர் போனாலும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
@twitter@https://x.com/annamalai_k/status/1939224812729356640twitter
சட்ட நடவடிக்கை
உடனடியாக, திருப்புவனம் இளைஞர் அஜித், போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகப் போராடும் திருப்புவனம் மக்களோடு நாங்கள் துணை நிற்கிறோம். உயிரிழந்த இளைஞர் அஜித் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் விடப்போவதில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.









மேலும்
-
போர் நிறுத்தத்தை இஸ்ரேல் கடைபிடிக்குமா: ஈரான் சந்தேகம்
-
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி: காஷ்மீர் துணை நிலை கவர்னர் உறுதி
-
விமான நிலையத்தில் ரூ.5.11 கோடி கஞ்சா பறிமுதல்: மும்பையில் பயணி கைது
-
தெலங்கானாவை டில்லியில் உள்ள ஒரு குடும்பத்தின் ஏ.டி.எம்.,மாக மாற்றிய காங்கிரஸ்; அமித் ஷா
-
டில்லியில் முன்னதாக வந்த பருவமழை: தணிந்தது வெப்பம்!
-
மேட்டூர் அணை நிரம்பியது: வினாடிக்கு 58 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்