விமான நிலையத்தில் ரூ.5.11 கோடி கஞ்சா பறிமுதல்: மும்பையில் பயணி கைது

2

மும்பை: தாய்லாந்தில் இருந்து 5.119 கிலோ உயர் ரக கஞ்சா கடத்தி வந்த பயணியை மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடமிருந்த கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த ஜூன் 27 அன்று, பாங்காக்கிலிருந்து வந்த இந்தியர் ஒருவர், இண்டிகோ 6இ 1052 விமானத்தில் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய போது இந்த சம்பவம் நடந்தது.

குறிப்பிட்ட ரகசிய தகவலின் அடிப்படையில், மும்பை விமான நிலைய சுங்க மண்டலம்-III இன் அதிகாரிகள், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து வந்த பயணியிடம் சோதனை நடத்தினர். அப்போது அவர், கொண்டுவந்த சரக்கு வைக்கும் தள்ளுவண்டியில் மறைத்து வைத்திருந்த ரூ.5.11 கோடி மதிப்புள்ள, 5.119 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை (உயர் ரக கஞ்சா) பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

ஹைட்ரோபோனிக் நுட்பங்களைப் பயன்படுத்தி வளர்க்கப்படும் உயர்தர கஞ்சா, அதன் வீரியம் மற்றும் தூய்மைக்காக கள்ளச் சந்தையில் மிகவும் விரும்பப்படுகிறது. இதனால் சர்வதேச சந்தையில் இதற்கு விலை மதிப்பும் அதிகம்.

போதைப்பொருள் தடுப்பு சட்டம், 1985 இன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.. குற்றம் சாட்டப்பட்டவர் உடனடியாகக் காவலில் எடுக்கப்பட்டார். மேலும் கடத்தலில் தொடர்புடைய நபர்களை கண்டறியவும் போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

Advertisement