தெலங்கானாவை டில்லியில் உள்ள ஒரு குடும்பத்தின் ஏ.டி.எம்.,மாக மாற்றிய காங்கிரஸ்; அமித் ஷா

6


நிஜாமாபாத்: "முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தெலங்கானாவை அவரது குடும்பத்தின் ஏ.டி.எம். ஆக மாற்றினார். தற்போதைய காங்கிரஸ் அரசு, தெலங்கானாவை டில்லியில் உள்ள ஒரு குடும்பத்தின் ஏ.டி.எம்.ஆக மாற்றியுள்ளது" என்று தெலங்கானாவில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம் செய்துள்ளார்.


நிஜாமாபாத்தில் தேசிய மஞ்சள் வாரியத்தின் தலைமையகத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது; வடகிழக்கு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மாவோயிஸ்ட்கள் சரணடைந்து விட்டு இயல்பு வாழ்க்கை வாழ்கின்றனர். அவர்களைப் போல பிற மாவோயிஸ்ட்களும் சரணடைய வேண்டும். ஆயுதங்களை ஏந்தும் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம். மாவோயிஸ்ட்களை ஒழித்து கட்டுவதில் மத்திய அரசு கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. கடந்த 18 மாதங்களில் மட்டும் 1,500 மாவோயிஸ்ட்கள் சரணடைந்துள்ளனர். வடகிழக்கில் மட்டும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் மனம் திருந்தி, இயல்பு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.


தெலங்கானா காங்கிரஸ் தலைமை மாவோயிஸ்ட்டுகளிடம் பேச்சுவார்த்தை நடத்துமாறு அறிவுறுத்துகின்றனர். மாவோயிஸ்ட்கள் பயங்கரவாதத்தால் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான பழங்குடி மக்களின் குடும்பங்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள்?

போலீஸ், பாதுகாப்புப் படையினர் மற்றும் அப்பாவி மக்களை கொன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை முடியுமா? மாவோயிஸ்ட்கள் பயங்கரவாதம் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை அழித்து விட்டது. மாவோயிஸ்ட்களை ஒழிக்க வேண்டுமா, வேண்டாமா?, என்று பொதுமக்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.


மேலும் அவர் பேசியதாவது; மாவோயிஸ்ட் சித்தாந்தத்தை ஒழித்து கட்டவே மக்கள் அதிகாரத்தை கொடுத்துள்ளார்கள் என்பதை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி புரிந்து கொள்ள வேண்டும். நாடு முழுவதும் உள்ள மாவோயிஸ்ட்களின் சொர்க்கபுரியாக தெலங்கானா மாறி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. காங்கிரசும், பாரத் ராஷ்டிர சமிதியும் ஊழல் கட்சிகள். மாபெரும் ஊழல்களை செய்ததால் தான் பாரத் ராஷ்டி சமிதி கட்சியை மக்கள் நிராகரித்தனர். ஆனால், ரேவந்த் ரெட்டி அரசு, ஒரு ஊழல் வழக்கை கூட முந்தைய அரசு மீது பதியவில்லை.


முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தெலங்கானாவை அவரது குடும்பத்தின் ஏ.டி.எம். ஆக மாற்றினார். தற்போதைய காங்கிரஸ் அரசு, தெலங்கானாவை டில்லியில் உள்ள ஒரு குடும்பத்தின் ஏ.டி.எம்.ஆக மாற்றியுள்ளது. பா.ஜ.,வால் மட்டுமே ஊழலற்ற, திறமையான ஆட்சியை கொடுக்க முடியும். பிரதமர் மோடி தலைமையிலான இரட்டை இன்ஜின் அரசால் மட்டுமே வளர்ச்சியை உருவாக்க முடியும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement