பராமரிப்பில்லாத பூங்கா: சீரமைக்க வலியுறுத்தல்

பொதட்டூர்பேட்டை:பராமரிப்பில்லாத பூங்காவை சீரமைக்க வேண்டுமென, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில், 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். பொதட்டூர்பேட்டையில் இருந்து திருதத்ணி செல்லும் சாலையில், நகரி கூட்டு சாலை அருகே, பூங்கா அமைந்துள்ளது.

இந்த பூங்காவை பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. பூங்காவில், பழமையான மரங்களும் உள்ளன.

இங்குள்ள விளையாட்டு சாதனங்களை சிறுவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சமீபகாலமாக இந்த பூங்காவின் பராமரிப்பு கேள்விக்குறியாக உள்ளது.

பூங்காவில் புதர் மண்டிக்கிடக்கிறது. பூங்காவில் நடைபயிற்சிக்காக, வேலியை ஒட்டி நடைபாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், தினசரி ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இந்த நடைபாதையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலி தற்போது சேதம் அடைந்துள்ளது.

இதனால், இந்த வழியாக நடந்து செல்பவர்கள் சற்றே கால் இடறினாலும், அதையொட்டி திறந்த நிலையில் கிடக்கும் கழிவுநீர் கால்வாயில் தவறி விழும் நிலை உள்ளது.

இதனால் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். மேலும் பூங்காவை ஒட்டி திறந்தநிலையில் உள்ள கழிவுநீர் கால்வாயால், பூங்காவில் துர்நாற்றம் வீசுகிறது.

பூங்காவில் வளர்ந்துள்ள புதரை அகற்றி கம்பிவேலியை சீரமைக்கவும், திறந்தநிலையில் உள்ள கழிவுநீர் கால்வாய்க்கு கான்கிரீட் மேல்தளம் அமைக்கவும் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement