வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே, வயல்வெளியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

மதுராந்தகம் ஒன்றியம், கள்ளபிரான்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட அத்திமனம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதாச்சலம், 60. அத்திமனம் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இவர், நேற்று வழக்கம் போல, தனக்குச் சொந்தமான விவசாய நிலத்திற்கு, காலை 11:00 மணியளவில் சென்றுள்ளார்.

அப்போது, படாளம் துணைமின் நிலையத்திலிருந்து அத்திமனம் பகுதி வயல்வெளிக்கு மின்சாரம் செல்லும், மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது.

எதிர்பாராத விதமாக, அந்த மின்கம்பியை மிதித்த வேதாச்சலம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து அங்கிருந்தோர், படாளம் காவல் நிலையம் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற படாளம் போலீசார், உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயி உயிரிழந்த தகவல் மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, 5 மணி நேரமாகியும் அதிகாரிகள் அப்பகுதிக்கு வராததால், கிராமத்தினர் சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின், படாளம் போலீசார் பேச்சு நடத்தி சமாதானம் செய்த பின், அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement