இடியும் நிலையிலுள்ள நிழற்குடை சீரமைக்க பயணியர் வேண்டுகோள்

அச்சிறுபாக்கம்:மின்னல் சித்தாமூர் அடுத்த கீழ்பட்டு கிராமத்தில், இடிந்து விழும் நிலையிலுள்ள நிழற்குடையை சீரமைக்க வேண்டுமென, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அச்சிறுபாக்கம் அடுத்த மின்னல் சித்தாமூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்பட்டு கிராமத்தில், 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இங்குள்ள பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் வெளியூர் பகுதிகளுக்கு வேலைக்குச் செல்வோர் பயன்பெறும் வகையில், ஒரத்தி- - தொழுப்பேடு மாநில நெடுஞ்சாலையில், 20 ஆண்டுகளுக்கு முன் பேருந்து பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக, உரிய பராமரிப்பின்றி, இந்த கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.

இதனால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உலவுகின்றன.

நிழற்குடையை சீரமைக்க கோரி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், பயணியர் நிழற்குடையை தவிர்த்து, மரத்தின் நிழலில் காத்திருந்து, பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.

எனவே, பழுதடைந்துள்ள நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, புதிதாக கட்டித்தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement