மூதாட்டி டிஜிட்டல் கைது மோசடி கும்பல் சிக்கியது

தானே: மஹாராஷ்டிராவில் மூதாட்டியை டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி, 3 கோடி ரூபாயை மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

மஹாராஷ்டிராவின் தானே நகரை சேர்ந்த 61 வயது மூதாட்டியை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ல் கூரியர் நிறுவன ஊழியர் எனக்கூறி ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

அப்போது, அந்த பெண்ணின் பெயரில் வந்த பார்சலில் 140 கிராம் போதைப்பொருள் இருந்ததால், அதை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

சற்று நேரத்தில் சி.பி.ஐ., அதிகாரி எனக்கூறி மற்றொரு நபர், மூதாட்டியை வாட்ஸாப் எண்ணில் தொடர்பு கொண்டார்.

அவர், சில போலி ஆவணங்களை திரையில் காட்டி போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பதால், டிஜிட்டல் முறையில் கைது செய்வதாக மூதாட்டியை மிரட்டினார்.

கைது செய்யப்படுவதை தவிர்க்க மூதாட்டியிடம் இரு வேறு வங்கி கணக்கு எண்களில் பணம் போடுமாறு கூறியுள்ளார்.

அதை நம்பிய மூதாட்டி, 3.04 கோடி ரூபாயை பரிமாற்றம் செய்துள்ளார். அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, தானே நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்படி, கடந்தாண்டு, செப்., 13ல் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில், மோசடி கும்பல், 82.46 லட்சம் ரூபாயை அமெரிக்க டாலராக மாற்றி, அதை கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயமாக்கி, வெளிநாட்டுக்கு அனுப்பியது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, வெளிநாட்டில் உள்ள கும்பலுடன், இவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணைநடத்தப்பட்டது.

இந்நிலையில், மும்பை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கிஷோர் பன்சிலால் ஜெயின், நகை வர்த்தகர் பவான் கோத்தாரி, அழகுசாதன பொருட்கள் விற்பனையாளர் தவால் சந்தோஷ் பலேரோ ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது.

Advertisement