வாகன சோதனையில் விபத்து மத்துார் போலீஸ் ஏட்டு பலி

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., மகாலிங்கம், 53, தலைமை காவலர் ஜெஸ்மீன் மில்டன்ராஜ், 44, ‍போச்சம்பள்ளி ஏழாவது அணி சிறப்பு காவல் படை பயிற்சி காவலர் சுகுமார், 28, உள்ளிட்டோர், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கிருஷ்ணகிரி -- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், பில்லக்கொட்டாயில் நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு பணியில் இருந்த போது, கர்நாடக மாநிலம், குடகு பகுதியிலிருந்து புதுச்சேரிக்கு கிரானைட் ஏற்றிவந்த லாரியை நிறுத்தி, பின்பக்கத்தில் நின்று தலைமை காவலர் ஜெஸ்மீன் மில்டன்ராஜ் ‍சோதனை செய்தார்.

அப்போது இரும்பு பாரம் ஏற்றி வந்த டாரஸ் லாரி, நின்ற லாரி மீது மோதியதில், இரு லாரிகளுக்கும் இடையில் சிக்கிய ஜெஸ்மீன் மில்டன்ராஜ் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனர். மில்டன்ராஜ் உடலுக்கு, கிருஷ்ணகிரி எஸ்.பி., தங்கதுரை மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement