ஸ்ரீ ஜெகன்நாதர் கோவிலில் திருமஞ்சன அபிஷேக நிகழ்ச்சி
கோவை; கோவையில் வரும் ஜூலை 5ல் நடைபெறும் ஜெகன்நாதர் தேர்த்திருவிழாவை ஒட்டி நேற்று, சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சி பக்தர்கள் சூழ கோலாகலமாக நடந்தது.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், (இஸ்கா) அமைப்பு ஆண்டு தோறும் தேர்த்திருவிழாவை கோவையில் நடத்துகிறது. இந்த ஆண்டு தேர்த்திருவிழா வரும் ஜூலை 5 ல் நடக்கிறது. இதையொட்டி கோவை - அவிநாசி சாலையிலுள்ள ஜெகன்நாதர் கோவிலில், நேற்று பகவான் ஜெகன்நாதர், பலதேவர், சுபத்ரா தேவிக்கு ஸ்னான யாத்திரை என்றழைக்கப்படும் திருமஞ்சன சேவை விமரிசையாக நடந்தது.
கோவில் கருவறையிலிருந்து ஜெகன்நாதர் பலதேவர் மற்றும் சுபத்ரா தேவி விக்ரகங்கள், கோவிலுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள அபிஷேகம் நடைபெறும் பந்தலுக்கு எழுந்தருளினர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், ஹரி நாம சங்கீர்த்தனம் பாராயணம் செய்தனர்.
அப்போது சங்கு சேகண்டி ஒலிக்க, நம் நாட்டின் அனைத்து புனித நதிகளிலிருந்தும் கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தங்களாலும், மலர்களாலும் அபிஷேகம் செய்யப்பட்டு சுவாமிக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டது. நிறைவில், திரளான பக்தர்கள் பங்கேற்ற அகண்ட நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடந்தது.
பகவான் ஜெகன்நாதருக்கு பக்தர்கள் பக்தியுடனும், அன்புடனும் தயாரித்திருந்த 1,008 உணவுப்பதார்த்தங்கள் பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.