செக்யூரிட்டி கடத்தல்; புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி : இட்லி மாவு வாங்க சென்ற செக்யூரிட்டியை காரில் கடத்திச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சொக்கநாதன்பேட்டையை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 35; இந்திய கடலோர காவல் படையில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வருகிறார். இவரது அண்ணன் முருகன்,40; செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் மாலை இட்லி மாவு வாங்கி வருவதாக கூறிவிட்டு, வீட்டில் இருந்து பைக்கில் சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த ராமச்சந்திரன், முருகனின் நண்பரான ராமகிருஷ்ணன்,42; என்பவரை விசாரித்தார். அப்போது, மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ., ரோட்டில் நின்றிருந்த முருகனை, வெள்ளை நிற காரில் வந்த சிலர், அழைத்து சென்றதாக கூறினார்.

ஆனால், முருகனை போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் ஓட்டிச் சென்ற பைக்கையும் காணவில்லை. இதுகுறித்து ராமச்சந்திரன், கடத்தப்பட்ட தனது அண்ணன் முருகனை கண்டு பிடித்து தரக்கோரி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, முருகன் கடத்தப்பட்டாரா அல்லது வேறு எங்காவது சென்றுள்ளாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Advertisement