தமிழக அரசு மெத்தனத்தால் போதை புழக்கம் அதிகரிப்பு; அ.தி.மு.க., மகளிரணி குற்றச்சாட்டு

மதுரை : தமிழகத்தில் அரசு மெத்தனத்தால் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது என அ.தி.மு.க., மகளிரணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டினார்.

மதுரையில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பிறந்த நாள் விழாவையொட்டி ரத்ததான முகாம் மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் தலைமையில் நடந்தது.

காயத்ரி ரகுராம் துவக்கி வைத்தார்.

அவர் கூறியதாவது:

தமிழகத்தில் அரசின் மெத்தனம் காரணமாக போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. மாணவர்கள் உட்பட பலரும் அடிமையாகி வருகின்றனர்.

தி.மு.க.,வில் உள்ளவர்களே போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் பாலியல், கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

ஆனால் திராவிட மாடல் அரசு என மக்களை மூளைச் சலவை செய்து திசை திருப்புவதில் ஆளுங்கட்சி குறியாக உள்ளது. மக்கள் வறுமையில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் மட்டும் மாடலாக வலம் வருகிறார்.

அ.தி.மு.க., கூட்டணி குறித்து கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டு அரைத்த மாவையே அரைப்பதை தி.மு.க., நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement