கோட்டை விட்டது அதிமுக: கொடி பிடித்தது மார்க்சிஸ்ட்: மதுரையில் ஆளுங்கட்சி 'டென்ஷன்'

மதுரை: மதுரை மாநகராட்சியில் தனியார் கட்டடங்கள், புதிய வீடுகளுக்கு விதிமீறி குறைவாக வரி நிர்ணயம் செய்ததில் ரூ.பல கோடி முறைகேடு நடந்துள்ளது. அதிகாரிகளுடன் தொடர்புள்ள தி.மு.க., புள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியே போர்க்கொடி துாக்கியுள்ளதால், தி.மு.க., தலைமை நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுக்க அ.தி.மு.க., கோட்டை விட்டதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் ஆயிரக்கணக்கான தனியார் கட்டடங்களுக்கு விதிமீறி வரிக் குறைப்பு செய்ததில் ரூ.பல கோடி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. விசாரணையில் அது உறுதியானது. இதுகுறித்து 2024ல் கமிஷனராக இருந்த தினேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடக்கிறது.
அமைச்சர் தொகுதி முன்னிலை
மாநகராட்சியின் 5 மண்டலங்களில் அமைச்சர் தியாகராஜன் தொகுதியான மத்திய தொகுதியில் உள்ள மண்டலம் 3ல் தான் அதிக முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போதைய கமிஷனர் சித்ரா அனுமதியுடன் விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்த அலுவலகத்தில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களை ஆய்வு செய்ததில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கின. உடனே அங்கு பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் (பொறுப்பு) ரங்கராஜன், தற்போதைய உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள், புரோக்கர்கள் என 8 பேரை கைது செய்துள்ளனர்.
55 பேர் பட்டியல் தயார்
கைதானவர்களிடம் குற்றப்பிரிவு உதவி கமிஷனர் வினோதினி நடத்திய விசாரணையில், 100 வார்டுகளிலும் சில மண்டல தலைவர்கள், தி.மு.க., பிரமுகர்கள், மாநகராட்சி அலுவலர்கள், புரோக்கர்கள் என மொத்தம் 55 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. விசாரணையை மேலும் தொடர்ந்தால் தேர்தல் நேரத்தில் தி.மு.க.,விற்கு கடும் நெருக்கடி உருவாகும் என்பதால் அடுத்த விசாரணைக்காக ஆளுங்கட்சி தலைமையின் சிக்னலுக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.
இந்த விவகாரத்தை தி.மு.க., கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கையில் எடுத்துள்ளது. 'முறைகேடு தொடர்பாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகவும், மிகப்பெரிய நெட் ஒர்க் மூலம் முறைகேடாக உள்ளதால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய 5 மண்டலங்களிலும் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மறுமதிப்பீடு செய்து முறையான வரிவிதிக்க வேண்டும்' எனவும் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க.,வுக்கு நெருக்கடி
இந்த விவகாரத்தை சாதாரணமாக கடந்து சென்றால் தேர்தல் நேரத்தில் மக்களை சந்திக்க முடியாது. நடவடிக்கை எடுத்தால் தி.மு.க.,வினர் பலர் சிக்கி, கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் தி.மு.க., தலைமைக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தி.மு.க.,வினர் கூறியதாவது: சமீபத்தில் வி.சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனை சூறையாடிய சம்பவத்தில் அத்தொகுதி எம்.எல்.ஏ., உதயகுமார் போலீஸ் அனுமதியை மீறி சம்பவ இடத்திற்கு சென்றார். போலீஸ்காரர், ஸ்டேஷனை தாக்கியோரை கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டார். இது ஆளுங்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அதுபோல் தற்போது மதுரை மாநகராட்சியில் ரூ.பல கோடி முறைகேடு நடந்துள்ளது.
எதிர்கட்சியான அ.தி.மு.க., மாநகராட்சி கூட்டத்தில் விதிமீறி வரிவிதிப்பு குறித்து ரூ.150 கோடி முறைகேடு நடந்துள்ளது என குற்றம்சாட்டியது. முறைகேட்டில் மாநகராட்சி அதிகாரிகளும் கைது செய்யப்பட்ட நிலையில், அ.தி.மு.க., ஏனோ இதுவரை அமைதி காக்கிறது. அதேநேரம் மார்க்சிஸ்ட் கொடி பிடித்துள்ளது நெருக்கடியை ஏற்படுத்தும் என்றனர்.





மேலும்
-
வெறும் இணைப்பு தான்... பிணைப்பு இல்லை; அ.தி.மு.க., - பா.ஜ., குறித்து திருமா கருத்து
-
ஐதராபாத் கெமிக்கல் ஆலையில் டேங்கர் வெடித்து 10 பேர் பலி; 20 பேர் காயம்
-
அமெரிக்காவில் தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை; காட்டுத்தீயை அணைக்க முயன்ற போது தாக்குதல்
-
சிகிச்சை அளிக்க கருவிகள் இல்லை டாக்டர் கருத்தால் புகைச்சல்
-
டிரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக பத்வா: பிறப்பித்தார் ஈரான் மதத்தலைவர்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.71,320!