இந்திய ராணுவத்தில் ஒவ்வொரு வீரனும் அர்ஜுனன் தான்; ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பேச்சு

கோவை : ''இந்திய ராணுவத்தில் உள்ள ஒவ்வொரு வீரனும் அர்ஜுனன் தான்,'' என, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லெப்டினெட் கர்னல் தியாகராஜன் பேசினார்.

ஆப்பரேஷன் சிந்துாரின் பெருமையை, கோவை மக்களுக்கு பறைசாற்ற, 'தினமலர்' நாளிதழ் மற்றும் சாணக்யா சார்பில், உரை வீச்சு நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ்.புரம், கிக்கானி பள்ளி கலையரங்கில் நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் தியாகராஜன் பேசியதாவது:

இந்தியாவின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது; மறக்கப்பட்டுள்ளது. இந்திய சீனப்போரில் நாம் தோல்வி அடைந்ததற்கு, அப்போதிருந்த தலைமையே காரணம். போரில் ஒரு தளவாடத்தை விட, அதன் பின் உள்ள ராணுவ வீரரின் திறமை தான் முக்கியம். அது இந்திய ராணுவ வீரர்களிடம் உள்ளது.

பயங்கரவாதத்தால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாதிக்கப்பட்டுள்ளது. காங்., தலைமையில் நாம் பல வெற்றிகளை இழந்தோம். பிரதமராக மோடி வந்த பின் ராணுவம் உயிர்பெற்றுள்ளது. உலகிலேயே, 12 நாட்களில் திட்டமிடல்களை முடித்து, ஒரே நாளில், 9 பயங்கரவாத தலைமையிடங்கள் அழிக்கப்பட்டன.

பாகிஸ்தான் மட்டுமல்ல, உலகமே இதை வியந்தது. பிரதமர் மோடி இரக்க குணத்தால் தான் போர் நின்றது. நாம் தாக்குதலை தற்காலிகமாகத்தான் நிறுத்தியுள்ளோம். நம் ராணுவத்தில் உள்ள ஒவ்வொரு வீரனும் அர்ஜுனன் தான்.

நம்மிடம், 30 க்கும் மேற்பட்ட வான்பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. அவை, 100 சதவீதம் துல்லியமானவை. உலகிற்கு போருக்கான புதிய நடைமுறையை இந்தியா வழங்கியுள்ளது. பாரதப்போரில் கிருஷ்ணன் எப்படி வெற்றி தேடி தந்தாரோ, அதுபோல், பிரதமர் மோடி வெற்றி பெற்றுத் தந்துள்ளார்.

சீனாவின் பல போர் தளவாடங்கள் நம்மிடம் செயல் இழந்துள்ளன. இன்று போர் தளவாடங்களுக்காக நாம் யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியமில்லை. நம் ராணுவத் தளவாடஏற்றுமதி, 174 சதவீதம் உயர்ந்துள்ளது.

நமது உற்பத்தி உலகளவில் பாராட்டக்கூடியதாக உள்ளது. அப்துல்கலாம் கனவை நனவாக்க கூடிய பிரதமர், இந்தியாவில் உள்ளார்.

இவ்வாறு, அவர் பேசினார்.

தமிழகம் தேசியத்தின் பக்கம்



பா.ஜ., மாநில பொது செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் பேசியதாவது:

ஆப்பரேஷன் சிந்துார் மற்றும் மதுரையில் நடந்த முருக மாநாட்டை பார்த்து எதிரிகள் அச்சப்பட்டுள்ளனர். இந்தியாவின் வரலாற்றை அறிந்து, எத்தகைய சூழலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என தெரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தை தேசியத்தின் பக்கம் நிற்க செய்தது, இந்த ஆப்பரேஷன் சிந்துார். ஸ்டாலினை தேசிய கொடி ஏந்தி செல்ல செய்தது. கடந்த காலங்களில் காங்., ஆட்சி செய்த போது, இந்தியாவின் நிலப்பரப்பை தாரை வார்த்தனர்.

அப்படி, மானத்தை இழந்து, இந்திய நிலத்தை தாரை வார்த்த காங்., ஆட்சி போல் இல்லாமல் ஆப்பரேஷன் சிந்துார் மூலம் பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி பாடம் கற்பித்துள்ளார். மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, ராணுவ உபகரணங்கள் நவீனமாக்கப்பட்டன.

ராணுவ உபகரணங்கள் உற்பத்தி செய்து, பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். இதனால், பல நாடுகளுக்கு இந்தியா மீதும், பிரதமர் மோடி மீதும் கோபம் வருகிறது. ராணுவ தளவாடங்கள், ராணுவ வீரர்களுக்கு என்ன தேவை என தெரிந்து, நமது நாட்டு ராணுவத்தை பலப்படுத்தி வைத்துள்ளார் பிரதமர். அடுத்த முறை மோடி பிரதமரானால் இந்தியாவின் வரலாறு மாற்றியமைப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், ராணுவத்தின் சார்பில், ராணுவத்தில் ஆட்கள் சேர்க்கைக்கான 'அக்னிபத்' குறித்து விளக்கும் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. அரங்கின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த 'செல்பி' பாய்ன்ட்டில் பொதுமக்கள் பலர், ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

உலக வரலாற்றில் 'ஆப்பரேஷன் சிந்துார்'

நிகழ்ச்சியில், 'சாணக்யா' முதன்மை செயல் அலுவலர் ரங்கராஜ் பாண்டே பேசுகையில், ''ஆப்பரேஷன் சிந்துார் உலக வரலாற்றில் பதியப்பட வேண்டிய ஒன்று. இன்று பழைய இந்தியா இல்லை. 'மோடியிடம் சொல்' எனத் தெரியாமல் கூறிவிட்டனர். அசாத்தியமான விசயங்களை சாதிப்பவர் பிரதமர் மோடி. எல்லையை தாண்டி தாக்கிய போதும், பொதுமக்கள், ராணுவத்தினருக்கு எச்சேதமும் ஏற்படவில்லை. பயங்கரவாதிகள் இடத்தை துல்லியமாக கண்டறிந்து தாக்கியது நம் பலம். தனது வெற்றியாக கருதாமல், நாட்டின் வெற்றியாக மோடி கருதுகிறார். நாட்டுக்கு சோதனை எனில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைவரும் ஒன்றாக நிற்பர் என்பதற்கு, ஆப்பரேஷன் சிந்துார் உதாரணம். டிரோன் தொழில்நுட்பத்தில், இந்தியா மிகப்பெரிய உயரத்தை எட்டியுள்ளது,'' என்றார்.

Advertisement