கொல்லிமலையில் அன்னாசி சீசன் துவக்கம் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

சேந்தமங்கலம்: கொல்லிமலையில் அன்னாசி பழ சீசன் துவங்கிய நிலையில், விலை உயர்வால் மலைவாழ் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், மா, பலா, கொய்யா, வாழைப்பழம், அன்னாசி போன்ற பழ வகைகளும், மிளகு, மரவள்ளி கிழங்கு உள்ளிட்டவையும் விளைவிக்கப்படுகிறது. அதில் முக்கியமாக, அரியூர் நாடு, குண்டூர் நாடு, திருப்புளி நாடு ஆகிய ஊராட்சிகளில் அன்னாசி பழம் விளைவதற்கான தட்பவெப்ப நிலவுவதால், 1,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் அன்னாசி பழங்கள், சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
தற்போது, ஆனியில் அன்னாசி சீசன் என்பதால், விளைச்சல் அதிகரித்துள்ளது. அறுவடை செய்து, விற்பனைக்காக அங்குள்ள சந்தை பகுதிகளுக்கு கொண்டு வரப்படுகிறது. அடிவாரத்தில் இருந்து, 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்தபின், முதலில் வருவது சோளக்காடு கிராமம்.
இங்கு, பழங்குடியினர் சந்தை தினமும் நடக்கிறது. கடந்தாண்டு சீசன் தொடங்கியபோது, 25 காய்கள் கொண்ட ஒரு சிப்பம், 400 ரூபாய் முதல், 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ஒரு சிப்பம், 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அன்னாசி பழ விலை உயர்வால் மலைவாழ் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement