அதிகாலை பயணத்தால் விபரீதம்; டெம்போ மீது லாரி மோதியதில் பக்தர்கள் 3 பேர் பரிதாப பலி

அமராவதி: ஆந்திராவில் அதிவேகமாக வந்த ஒரு லாரி, டெம்போ மீது மோதி விபத்து ஏற்பட்டதில், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து அதிகாலை 5 மணி அளவில் நிகழ்ந்துள்ளது.

கர்நாடகா சிக்கபல்லபுரத்தை சேர்ந்த 14 பேர் கொண்ட குடும்பத்தினர் நேற்று திருப்பதி சென்றனர். தரிசனம் முடித்து அனைவரும் டெம்போ டிராவலரில் சொந்த ஊர் கிளம்பினர். டெம்போ இன்று (ஜூன் 30) அதிகாலை 5 மணி அளவில் ஆந்திரா தொம்மனா பாவி என்ற இடத்தில், தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது.



அப்போது அதிவேகமாக வந்த ஒரு லாரி, டெம்போ மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. டெம்போவின் ஒரு பாதி முற்றிலும் சேதமடைந்து உள்ளே இருந்தவர்கள் அலறினர். இதில், சரண், 17, மேகர்ஷ் 17, ஸ்ரவாணி 28 ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.


டிரைவர் மஞ்சுநாத் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர். இதில் 6 பேர் பலத்த காயம் மதனப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதிர்ஷ்டவசமாக லாரி மோதியதற்கு எதிர் திசையில் இருந்த 2 பேர் காயமின்றி உயிர் தப்பினர்.


விபத்தை ஏற்படுத்திய லாரியை அருகில் உள்ள டோல்கேட் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்து தேடி வருகின்றனர். விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது. துாக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டும்போது சற்று கண் அசந்தாலும் பெரும் விபத்து நேரிட்டு விடும். எனவே, இரவு, அதிகாலை நேரங்களில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

Advertisement