மணிப்பூரில் 4 பேர் சுட்டுக்கொலை: அடையாளம் தெரியாத நபர் வெறிச்செயல்

4

இம்பால்: மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு முதல் மெய்தி - குக்கி இன மக்கள் இடையே மோதல் நீடித்து வருகிறது. அங்கு, துணை ராணுவத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர். மத்திய அரசின் நடவடிக்கைகளினால் அங்கு அமைதி திரும்பி வருகிறது.


இந்நிலையில் சூரசந்த்பூர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர் சுட்டதில் 60 வயது மூதாட்டி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். சுட்டவர் யார், இறந்தவர்கள் யார் என தெரியவில்லை. அவர்களை அடையாளம் காணும்பணி நடந்து வருகிறது. கொலையாளி அருகில் இருந்தே சுட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவத்துக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அங்கு ஏராளமான தோட்டாக்கள் காணப்படுவதால், தானியங்கி துப்பாக்கி மூலம் இச்சம்பவத்தை கொலையாளி நடத்தியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisement