ஆயுஷ் ஷெட்டி 'சாம்பியன்': யு.எஸ்., ஓபன் பாட்மின்டனில்

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் பாட்மின்டன் ஒற்றையரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
நியூயார்க்கில், யு.எஸ்., ஓபன் 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, கனடாவின் பிரையன் யங் மோதினர். மொத்தம் 47 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஆயுஷ் 21-18, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக 'வேர்ல்டு டூர்' பட்டம் வென்றார்.
கர்நாடகாவை சேர்ந்த ஆயுஷ் 20, யு.எஸ்., ஓபன் ஒற்றையரில் பட்டம் வென்ற 2வது இந்திய வீரரானார். இதற்கு முன், 2017ல் பிரனாய் கோப்பை வென்றிருந்தார். நடப்பு சீசனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய முதல் இந்தியரானார் ஆயுஷ். தவிர, அன்னிய மண்ணில் 2 ஆண்டுகளுக்கு பின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பட்டமானது. கடைசியாக 2023ல் கனடா ஓபனில் லக்சயா சென் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
தான்வி 2வது இடம்: பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் தான்வி சர்மா 16, அமெரிக்காவின் பெய்வென் ஜாங் 34, மோதினர். முதல் செட்டை 11-21 என இழந்த தான்வி, பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 21-16 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் ஏமாற்றிய தான்வி, 10-21 எனக் கோட்டைவிட்டார். முடிவில் தான்வி 11-21, 21-16, 10-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.