வீடு கட்டும் முன் மண் பரிசோதனை அவசியம்; தாங்கும் திறன் அறிந்தால் கவலை இல்லை

உங்கள் கனவு இல்லத்தின் கட்டுமான வெற்றி என்பது, மண்ணின் தன்மை புரிந்தவுடன் தானாக உருவாகிறது. ஒரு வீடு என்பது நம்மைத் தாங்கும் கட்டடம் மட்டுமல்ல, நம்முடைய கனவுகளையும்,நம்பிக்கையையும் தாங்கும் வாழ்விடம்.

அந்த வீட்டின் பலம், அடித்தளத்தில் மட்டுமல்ல, அடித்தளத்தின் கீழிருக்கும் மண்ணின் தன்மையில் உள்ளது என்பதை அறியாமல், பெரும்பாலானவர்கள் கட்டுமானத்தைத் தொடங்குகிறார்கள். பலரும் மண் ஆய்வு அவசியமா? என்று கேட்பதுண்டு.

உண்மையில் இது கட்டுமான செலவில், மிகச் சிறிய ஒரு பங்கு தான்; ஆனால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய 'ஸ்டிரக்சுரல்' பிழைகளை தவிர்க்க, மிக முக்கியமான முடிவாகும் என்கிறார், கோவை மண்டல கட்டடப் பொறியாளர்கள் சங்க (கொஜினா) தலைவர் பழனிசாமி.

அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது...

மண் ஆய்வு வாயிலாக, களிமண், மணல், மண் கலவைகள் என எந்த வகையான மண் என்பதையும், ஈரப்பதம், நீர் உறிஞ்சும் தன்மை, தாங்கும் திறன், நீர் நிலை, உப்புத்தன்மை ஆகியவற்றுடன் வீட்டின் அடித்தள வடிவமைப்பை தீர்மானிக்க முடியும்.

அடித்தளம் என்பது ஒரு கட்டடத்தின் துாண்களுக்குச் சேவையாற்றும் நிஜமான நம்பிக்கை. ஆனால், அடித்தளமும் மண் என்பதன்மேல் தாங்கப்படுகிறது. ஒவ்வொரு கட்டடமும் தங்கள் சரியான தாங்கும் திறனிற்கு ஏற்ப, வடிவமைக்கப்பட வேண்டும்.

மண்ணின் தாங்கும் திறன் குறைவாக இருந்தால், அடித்தளம் தாழ்ந்து வீடு வீழ்ச்சி காணலாம், சுவர்களில் முறிவு ஏற்படலாம், நீர் விழிப்புகள் ஏற்பட்டு ஈரப்பதம் தொடரலாம். இதுபோன்ற விளைவுகளை தவிர்க்க, மண் ஆய்வு செய்தபின் தான் 'ஸ்டிரக்சுரல் டிசைன்' மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது கட்டாயம்.

சிலர், 'இந்த மண் நல்லா தான் இருக்கு' என்று அனுபவத்தால் யூகிக்கலாம். ஆனால், மண்ணின் உண்மையான தன்மை கண்களால் தெரிந்தால், விஞ்ஞானிகள் தேவையில்லையே? மண்ணின் வகை, சிதைவு, சாய்வு, உப்பு அளவு உள்ளிட்டவை கட்டட பொறியாளர்களாலும், ஆய்வகங்களாலும் மட்டுமே நிரூபிக்க முடியும்.

எனவே, ஸ்டாண்டர்டு பெனட்ரேஷன், கோர் சாம்ப்ளிங், வாட்டர் டேபிள் அனாலிசிஸ், டிரை டென்சிட்டி பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

இவை உங்கள் வீட்டை அடிக்கடி பழுது பார்க்க வேண்டிய கட்டடமாக இல்லாமல், ஒரு தலைமுறைக்கே உரிய, தங்கும் இடமாக மாற்றும். சிறிய மண் பரிசோதனை வாயிலாக, பெரிய 'ஸ்டிரக்சுரல்' தவறுகளையும், செலவுகளையும் தவிர்க்கலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement