விசாரணை மரணங்களில் சாதனை: தமிழக அரசு மீது சீமான் குற்றச்சாட்டு

சென்னை: விசாரணை மரணங்களில் குஜராத்தை பின்னுக்கு தள்ளி தென்மாநிலங்களில் முதலிடம் பெற்றிருப்பதுதான் தமிழக அரசின் ஈடு இணையற்ற சாதனையாகும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார்.
அவரது அறிக்கை:
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் 24 விசாரணை மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல் கூறுகின்றது. ஆனால், உண்மையில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் காவல்துறை விசாரணையின்போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நாற்பதை தாண்டும். திமுக ஆட்சியில் 2021 ஆம் ஆண்டு 10 விசாரணை மரணங்களும், 2022 ஆம் ஆண்டு 11 விசாரணை மரணங்களும், 2023 ஆம் ஆண்டு 7 விசாரணை மரணங்களும், 2024 ஆம் ஆண்டு 9 விசாரணை மரணங்களும் காவல்துறை விசாரணையின்போது நடைபெற்றதாக தெரியவருகிறது
நடப்பாண்டில் நடைபெற்றுள்ள விசாரணை மரணங்கள் இவற்றில் கணக்கிடப்படவில்லை. காவல்துறை விசாரணையின்போது நடைபெறும் படுகொலைகளில் குஜராத்தை பின்னுக்கு தள்ளி தென்மாநிலங்களில் முதலிடம் பெற்றிருப்பதுதான் தமிழக அரசின் ஈடு இணையற்ற சாதனையாகும்.
நான்கரை ஆண்டுகால தமிழக அரசின் ஆட்சி ; நடைபெறும் விசாரணை படுகொலைகளே சாட்சி!
சட்டம் ஒழுங்கை சீர்படுத்தி, நாள்தோறும் நடைபெறும் படுகொலைகளை தடுத்து மக்களை பாதுகாப்பதில் காட்டாத ஆர்வமும், வேகமும் விசாரணை என்ற பெயரில் அப்பாவி மக்களை அடித்துக்கொல்வதில் தமிழ்நாடு காவல்துறை காட்டுவதுதான் அப்பாவின் ஆட்சியின் அசைக்க முடியாத சாதனையாகும்.
இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.