விம்பிள்டன்: போராடி வென்றார் அல்காரஸ்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் முதல் சுற்றில் ஸ்பெயினின் அல்காரஸ் போராடி வெற்றி பெற்றார்.

லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், 'நடப்பு சாம்பியன்' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 22, இத்தாலியின் பேபியோ போக்னினி 38, மோதினர். முதல் செட்டை 7-5 என போராடி கைப்பற்றிய அல்காரஸ், 'டை பிரேக்கர்' வரை சென்ற 2வது செட்டை 6-7 என இழந்தார். பின் 3வது செட்டை 7-5 என வென்ற அல்காரஸ், 4வது செட்டை 2-6 எனக் கோட்டைவிட்டார். இதனையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க போட்டி 5வது சுற்றுக்கு சென்றது. இதில் அல்காரஸ் 6-1 என மிகச் சுலபமாக வென்றார்.
நான்கு மணி நேரம், 37 நிமிடம் நீடித்த போட்டியில் அல்காரஸ் 7-5, 6-7, 7-5, 2-6, 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு முன்னேறினார்.


வெயில் தாக்கம்லண்டன் ஆல் இங்கிலாந்து கிளப் மைதானத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வீரர், வீராங்கனைகள் மட்டுமின்றி பார்வையாளர்களும் பாதிக்கப்பட்டனர். வெப்பநிலை 33 டிகிரி செல்சியசாக இருந்தது. இது, விம்பிள்டன் தொடரின் முதல் நாளில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையானது. இதற்கு முன் 2001ல், முதல் நாளில் 29.3 டிகிரி செல்சியசாக இருந்ததே அதிகம்.
அல்காரஸ், போக்னினி மோதிய போட்டியின் போது மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் போட்டி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. அவர் இயல்பு நிலைக்கு திரும்பிய பின், மீண்டும் போட்டி நடந்தது.

Advertisement